ADDED : டிச 13, 2024 05:17 AM
பெங்களூரு: பல்லாரி சாலையை அகலப்படுத்தும் பணிக்கு, அரண்மனையின் 15.39 ஏக்கர் இடத்தை கையகப்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அரச குடும்பத்தினருக்கு, 3,000 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க, அரசு முன் வந்தது, விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரின் இதய பகுதியில் உள்ள அரண்மனை சுற்றுப்பகுதிகளில், வாகன போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வு காணும் நோக்கில், சாலையை அகலப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூரின் பல்லாரி சாலை, ஜெயமஹால் சாலைகளை விஸ்தரிக்க முடிவு செய்துள்ளது.
பணிகளை மேற்கொள்ள, அரண்மனை மைதானத்தின் 15.39 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இந்த நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக அரச குடும்பத்தினருக்கு, 3,000 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பல தரப்பில் இருந்தும், எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
'அரண்மனை சம்பந்தப்பட்ட இடம் என்பதால், அரசு இவ்வளவு பெரிய தொகையை வழங்க முன் வந்துள்ளது. விவசாயிகள் நிலமாக இருந்திருந்தால், இவ்வளவு பணம் வழங்க முன் வந்திருக்காது' என்ற கருத்து வெளியாகியுள்ளது.
'அர்க்காவதி, கெம்பேகவுடா, சிவராம் காரந்த் லே - அவுட் உட்பட பல்வேறு லே - அவுட்களுக்காக, தங்கள் நிலத்தை இழந்தவர்கள் இன்றைக்கும், நீதிமன்றம், அரசு அலுவலகங்களுக்கு அலையாய் அலைகின்றனர்.
இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. இவர்களை பற்றி அரசு கவலைப்படவில்லை. நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில், அரசு பாரபட்சம் பார்க்கிறது' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

