கேரளாவில் ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்: கடத்தல் குருவிகள் கைது
கேரளாவில் ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்: கடத்தல் குருவிகள் கைது
ADDED : நவ 21, 2025 12:48 PM

திருவனந்தபுரம்: சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வயநாடு போலீசார் இணைந்து நடத்திய வாகன சோதனையில், கோழிக்கோட்டில் ரூ.3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. ரயில் நிலையத்தில், சந்தேகத்தின் பேரில், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வயநாடு போலீசார் இணைந்து கோழிக்கோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, ரூ.3.15 கோடி ஹவாலா பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சல்மான்,36, ஆசிப் 24, ராசாக்,38, முகமது பாசில்,30, மற்றும் அப்பு (எ) முகமது,32 ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 பேர் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் குழு மற்றும் போலீசார் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். இவர்கள் வாரம் தோறும், பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு காரில் ஹவாலா பணத்தை கடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த கடத்தல் குருவிகளின் பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

