இரவு பகலாக 104 நாட்கள்... நாயை தேடிய தம்பதியின் பாசப் போராட்டம் சக்சஸ்!
இரவு பகலாக 104 நாட்கள்... நாயை தேடிய தம்பதியின் பாசப் போராட்டம் சக்சஸ்!
UPDATED : பிப் 17, 2025 09:24 AM
ADDED : பிப் 17, 2025 08:45 AM

ஆக்ரா: தாஜ்மஹால் அருகே காணாமல் போன நாயை இரவு பகலாக 104 நாட்கள் தேடிய தம்பதியின் பாசப்போராட்டம் வெற்றி அடைந்தது. வழி தெரியாமல் காட்டுப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்த நாய், வளர்த்தவரின் குரல் கேட்டதும் ஓடோடி வந்து அவரை கட்டித்தழுவிக் கொண்டது.
டில்லியை சேர்ந்தவர் தீபாயன் கோஷ். இவரது மனைவி கஸ்தூரி பத்ரா. இந்த தம்பதி குர்கானில் வசிக்கின்றனர். இவர்கள் வூப் (Woof) மற்றும் கிரேஹவுண்ட் (Greyhound) என்ற பெயரில் இரு நாட்டு ரக நாய்களை பாசமுடன் வளர்க்கின்றனர். வெளியில் எங்கு சென்றாலும் இந்த நாய்களையும் தங்களுடன் அழைத்துச் செல்வது வழக்கம். இந்த தம்பதி, நவம்பர் 3ம் தேதி, ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டலில் நாய்களுடன் தங்கி இருந்தனர்.
நாய்களை ஹோட்டலில் விட்டு விட்டு, பதேபூர் சிக்ரியில் சுற்றிப் பார்க்க சென்றனர். அப்போது, திறந்திருந்த ஹோட்டல் கதவு வழியாக கிரேஹவுண்ட் நாய் வெளியே சென்று விட்டது. நாயை காணாமல் திடுக்கிட்ட ஹோட்டல் ஊழியர்கள், தம்பதிக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த தம்பதி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடிப் பார்த்தனர்.
நாயை கண்டுபிடிக்க முடியவில்லை.
வேறு வழியில்லாத நிலையில், ஹோட்டல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் உதவியுடன் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. ஆனாலும் நாய் கிடைக்கவில்லை.காணாமல் போன, இரண்டு நாட்கள் கழித்து நவம்பர் 5ம் தேதி தாஜ்மஹால் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நாய் சுற்றி திரிந்த காட்சி சி.சி.டி.வி.,யில் பதிவாகி இருந்தது.
வேறு சிலரோ, நாயை ஆக்ராவில் உள்ள ஷாஜகான் கார்டனில் பார்த்ததாக தெரிவித்தனர்.
நாய் ஆக்ராவில் இருப்பதை உறுதி செய்து கொண்ட தம்பதி, இரண்டு வாரங்கள் அங்கேயே தங்கி வீடு வீடாக சென்று விசாரித்தனர். வழியில் தென்பட்ட நபர்களிடம் எல்லாம், தங்கள் நாய் காணாமல் போய்விட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியாக இருந்தாலும், இருள் சூழ்ந்த இடமாக இருந்தாலும், தேடிச் செல்வதற்கு தம்பதி தயங்கவில்லை. தன் நாயின் பெயரைச் சொல்லி, பல நூறு முறை கஸ்தூரி அழைப்பார். எங்காவது அருகில் இருந்தால், தன் குரல் கேட்டதும் நாய் ஓடி வந்து விடும் என்பது அவரது நம்பிக்கை.
இப்படியே நாட்கள் கடந்தன. நாயை கண்டுபிடித்துக் கொடுத்தால் 30 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்குவதாக முதலில் அறிவித்த தம்பதி, பின்னர் அதை ஐம்பதாயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தனர். அப்படியும் அவர்களுக்கு பலன் கிடைக்கவில்லை. ஆக்ரா நகரம் முழுவதும் நாய் படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சி.சி.டி.வி., இருக்கும் இடங்களில் எல்லாம் சென்று அங்கு பதிவாகியுள்ள காட்சிகளை மணிக்கணக்கில் பார்த்தனர்.
அவ்வப்போது குர்கானுக்கும் சென்று வந்தனர். ஆனாலும் காரிலேயே தான் அவர்களது நாள் முழுவதும் கழிந்தது. இரவு பகலாக நாயை தேடிய அவர்களுக்கு முயற்சிக்கு கடைசியில் பலன் கிடைத்தது. பிரசாந்த் ஜெயின் என்ற சுற்றுலா வழிகாட்டி, அவர்களுக்கு போன் செய்து உங்கள் நாயைப் போலவே ஒரு நாய் இருப்பதாக தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் குறிப்பிட்ட ஷாஜகான் கார்டன் பகுதிக்கு தம்பதி காரில் சென்றனர். அதற்குள் அங்கு இருள் கவிழ்ந்து விட்டது. ஆனாலும் தம்பதி தங்கள் நம்பிக்கையை கைவிடவில்லை.
காரில் இருந்து இறங்கியதும், கஸ்தூரி மீண்டும் ஒருமுறை தன் நாயின் பெயரைச் சொல்லி சத்தமாக கூப்பிட்டார். அவரது குரல் கேட்டதும், அவர் வளர்த்து ஆளாக்கிய செல்ல நாய், இருட்டுக்குள் இருந்து நான்கு கால் பாய்ச்சலில் ஓடோடி வந்து அவரைக் கட்டித் தழுவிக் கொண்டது. வாயில்லா அந்த ஜீவனை பாசமுடன் வளர்த்த தம்பதி, கண்ணீர் மல்க அதை அரவணைத்துக் கொண்டனர். வளர்ப்பு நாய்க்காக, 104 நாட்கள், வேலையை விட்டு, தேடுவதையே 24 மணி நேரமும் செய்து கொண்டிருந்த அந்த தம்பதி, தங்களுக்கு உதவிய அனைவருக்கும், கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.