ரூ.9,960 * ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை * சவரன் ரூ. 79,680க்கு விற்பனை
ரூ.9,960 * ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை * சவரன் ரூ. 79,680க்கு விற்பனை
ADDED : செப் 06, 2025 09:07 PM
புதுடில்லி: டில்லியில், 22 காரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 9,960 ரூபாய்க்கும்; சவரன் விலை, 79,680 ரூபாய்க்கும் விற்பனையானது. நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரித்து வருவது நடுத்தர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டில் தங்கம் பயன்பாடு மற்றும் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது போல, அதன் விலையும் உயர்ந்து வருகிறது. தங்க நகை அடமானத்துக்கு உடனடி கடன் கிடைக்கிறது.
இதனால் குழந்தைகள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க பாதுகாப்பான முதலீடாக ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்கி சேமிக்கின்றனர்.
அதனால்தான் விலை எவ்வளவு உயர்ந்தாலும், தங்கள் கையில் இருக்கும் பணத்துக்கு ஏற்ப தங்கத்தை வாங்குகின்றனர். சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
டில்லியில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் நேற்று முன் தினம் 9,880 ரூபாயாகவும்; சவரன் 79,040 ரூபாயாகவும் இருந்தது. அதுவே நேற்று, ஒரு கிராம் 9,960 ரூபாயாகவும்; சவரன் 79,680 ரூபாயாகவும் அதிகரித்தது.
அதேபோல, நேற்று முன் தினம் ஒரு கிராம் 8,084 ரூபாய்க்கு விற்கப்பட்ட 18 காரட் தங்கம், 65 ரூபாய் உயர்ந்து 8,149 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் 18 காரட் தங்கம் 65,192 ஆக இருந்தது.
தமிழகத்திலும் உச்சம் தமிழகத்திலும் கடந்த மாத இறுதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,865 ரூபாய்க்கும், சவரன், 78,920 ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு, 140 ரூபாய் அதிகரித்து, 10,005 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,120 ரூபாய் உயர்ந்து, 80,040 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்தளவுக்கு தங்கம் விலை உயர்ந்திருப்பது திருமண வீட்டார், பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள், நகை பிரியர்கள், ஏழை மக்கள் என, பலரிடமும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது:
சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்வதாலும், வரும் காலத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பு, வீழ்ச்சியை நோக்கி செல்ல கூடிய வாய்ப்புகள் உள்ளதாலும் பல நாடுகளும் தங்களிடம் உள்ள அன்னிய செலாவணியை, தங்கமாக மாற்றத் துவங்கியுள்ளன.
மேலும், தங்கள் கருவூலங்களிலும் தங்கத்தின் இருப்பை அதிகரித்து வருகின்றன.
இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. நேற்று மட்டும் சர்வதேச சந்தையில், 31.1 கிராம் எடை கொண்ட 'அவுன்ஸ்' தங்கம் விலை, 50 டாலர் அதாவது, இந்திய மதிப்புக்கு 4,300 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால்தால் நம் நாட்டிலும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. இந்தாண்டு இறுதியில், தங்கம் விலை பெரிய உச்சத்தில் இருக்கும்.
வழக்கமாக, ஓராண்டில் தங்கம் விலை சராசரியாக, 30 - 35 சதவீதம் உயரும். ஆனால், இந்தாண்டில், ஆண்டு முடிவடைய இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், தற்போதே தங்கம் விலை, 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி மீதும் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.