அனைத்து ஆயுதப்படையினர் அடங்கிய 'ருத்ரா' குழு: அறிவித்தார் ராணுவ தளபதி
அனைத்து ஆயுதப்படையினர் அடங்கிய 'ருத்ரா' குழு: அறிவித்தார் ராணுவ தளபதி
ADDED : ஜூலை 27, 2025 06:04 AM

கார்கில்: “அனைத்து ஆயுதப்படையினரும் அடங்கிய, 'ருத்ரா' குழு விரைவில் அமைக்கப்படும்,” என, ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
கடந்த, 1999ல், நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில், நாம் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு நடந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க, ஜம்மு - காஷ்மீரில் உள்ள கார்கிலுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி நேற்று சென்றார்.
அங்கு, டிராஸ் பகுதியில் அமைந்திருக்கும் கார்கில் வெற்றி நினைவு தூணில், போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அவர் மலரஞ்சலி செலுத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
நம் நாட்டு ராணுவம் தற்போதைய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வது மட்டுமல்லாமல், மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நவீனமயத்துக்கு மாறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 'ருத்ரா' என்ற பெயரில் அனைத்து ஆயுதப்படையினரும் அடங்கிய குழு உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.
நவீனமயமாக்கப்பட்ட தளவாடங்களுடன், இந்த குழுவுக்கு சிறப்பு போர் பயிற்சி அளிக்கப்படும். இதேபோல், எல்லையில் உள்ள எதிரிகளை சமாளிக்க, சுறுசுறுப்பான மற்றும் மிகவும் ஆபத்தான சிறப்பு படைப்பிரிவான, 'பைரவ்' லைட் கமாண்டோ பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. நவீன ரக ஆயுதங்களை பயன்படுத்த இந்தப் பிரிவுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

