'ஆட்சேர்ப்பு நடைமுறையின் இடையே விதிகளை மாற்ற முடியாது'
'ஆட்சேர்ப்பு நடைமுறையின் இடையே விதிகளை மாற்ற முடியாது'
ADDED : நவ 08, 2024 02:35 AM
புதுடில்லி 'அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை துவங்கிய பின், விதிகளை இடையில் மாற்ற முடியாது' என, உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் காலியாக இருந்த மொழி பெயர்ப்பாளர்கள் பணிக்கான 13 இடங்களை நிரப்ப, நீதிமன்ற நிர்வாகப் பிரிவு அழைப்பு விடுத்தது.
மொத்தம் 21 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான எழுத்து மற்றும் நேர்முக தேர்வு முடிந்த பின், மூன்று பேர் மட்டுமே தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.
எழுத்து தேர்வில், 75 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களை மட்டுமே தகுதி பெற்றவர்களாக கருதும்படி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டதாகவும், அதன் அடிப்படையிலேயே பணியிடங்கள் நிரப்பப்பட்டதாகவும் பின்னர் தெரியவந்தது.
இதை எதிர்த்து தேர்வர்கள் மூன்று பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், 'தேர்வுக்கான அறிவிப்பில், 75 சதவீதம் பெறுபவர்கள் மட்டுமே தகுதி பெறுவர் என்பது குறிப்பிடப்படவில்லை. ஆட்சேர்ப்பு பணி நடைமுறையில் இருக்கும்போது இடையில் விதிகளை மாற்றுவது நியாயமற்றது' என, மனுதாரர்கள் தரப்பு தெரிவித்தது.
இந்த மனுவை, 2010 மார்ச்சில் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது.
மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். அப்போது, மஞ்சுஸ்ரீ மற்றும் ஆந்திர அரசுக்கு இடையே நடந்த இதே போன்ற ஒரு வழக்கில், மனுதாரருக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் 2008ல் வழங்கிய தீர்ப்பு மேற்கோளாக காட்டப்பட்டது.
அனைத்து வழக்கிலும், மஞ்சுஸ்ரீ தீர்ப்பை அளவுகோலாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு, நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அப்போது, 'அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை துவங்கிய பின், இடையில் விதிகளை மாற்ற முடியாது' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.