தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ரஷ்ய அதிபரின் உதவியாளர் சந்திப்பு
தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ரஷ்ய அதிபரின் உதவியாளர் சந்திப்பு
ADDED : நவ 18, 2025 06:31 AM

புதுடில்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த மாதம் நம் நாட்டுக்கு வரவுள்ள நிலையில், அவரது உதவியாளர் நிகோலே பட்ருஷேவ், டில்லியில் நேற்று நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க, அடுத்த மாதம் 5ம் தேதி டில்லி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிபர் புடினின் நெருங்கிய உதவியாளர் நிகோலே பட்ருஷேவ் நேற்று டில்லி வந்தார். நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், அதிபர் புடினின் வருகைக்கான ஏற்பாடுகள் பற்றி பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தேசிய கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தாவையும் பட்ருஷேவ் சந்தித்து பேசினார்.
இந்தியா - ரஷ்யா இடையே 22 உச்சி மாநாடுகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு ஜூலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

