சபரிமலை முன்பதிவு முடிந்தது; தினமும் 10,000 பேர் 'ஆப்சென்ட்'
சபரிமலை முன்பதிவு முடிந்தது; தினமும் 10,000 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : டிச 06, 2024 06:49 AM

சபரிமலை: மண்டல, மகர விளக்கு காலத்தில் சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு மூன்று நாட்களை தவிர்த்தால் முழுமையாக முடிவடைந்துள்ளது. இதனால் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுக்கு அலை மோதுகின்றனர். எனினும் முன்பதிவு செய்தவர்களின் தினமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை தரிசனத்திற்கு வருவதில்லை.
சபரிமலை தரிசனம் விருச்சுவல் கியூ என்ற ஆன்லைன் மூலம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங்கில் 10 ஆயிரம் பேரும் தினமும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் முன்பதிவை 80 ஆயிரமாக அதிகரிக்க கேரள உயர்நீதிமன்றம் கூறியும், தேவசம்போர்டு அமல்படுத்தாமல் உள்ளது. அவ்வாறு செய்தால் மேலும் கூட்டம் அதிகமாகும் என்பதே காரணம்.
மண்டல, - மகர விளக்கு காலத்தில் ஜன. 17, 18, 19 தவிர்த்தால் மீதமுள்ள அனைத்து நாட்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. மண்டல காலம் பாதி மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் மகர விளக்கு காலத்துக்கான விருச்சுவல் கியூ முன்பதிவும் முடிந்துள்ளதால் பக்தர்கள் தரிசன டிக்கெட் கிடைக்காமல் அலை மோதுகின்றனர்.
ஆனால் இருமுடியுடன் வரும் எந்த பக்தரும் தரிசனம் செய்யாமல் திரும்பி செல்ல மாட்டார்கள் என்று தேவசம்போர்டு உறுதியாக கூறுகிறது. இதற்காக எருமேலி மற்றும் பம்பையில் ஸ்பாட் புக்கிங் கவுன்டர்களை அதிகரிப்பது பற்றி ஆலோசித்து வருகிறது. பம்பையில் ஆறு கவுன்டர்கள் மட்டுமே உள்ள நிலையில் இதை 10 ஆக அதிகரிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியுள்ளார்.
நடப்பு சீசனில் மொத்தம் 14 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததில் 2 லட்சம் பேர் ஸ்பாட் புக்கிங்கில் பதிவு செய்து வந்தவர்கள் . ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களில் தினமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை தரிசனத்திற்கு வராமல் உள்ளனர். இவர்கள் தங்கள் பயணத் திட்டத்தை மாற்றியவுடன் முன்பதிவை ரத்து செய்தால் வேறு பக்தர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று தேவசம்போர்டு பலமுறை எடுத்துக் கூறியும் பக்தர்கள் அதை செய்யாதது கவலை அளிக்கிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.