ADDED : ஜன 04, 2025 11:22 PM
சபரிமலை:சபரிமலையில் இந்தாண்டு மகரஜோதியும் மகர சங்கரம பூஜையும் ஜன.,14- ல் நடக்கிறது.
சபரிமலையில் மகர விளக்கு சீசனின் முக்கிய நிகழ்வு மகரஜோதி தரிசனம். இந்தாண்டு ஜன., 14- மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் இருந்து கடக்கும் நாளில் மகர சங்கரம பூஜையும் மகரஜோதி தரிசனமும் நடக்கும்.
ஜன., 14- காலை 8:55 மணிக்கு மகர சங்கரம பூஜை நடக்கும் என தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறியுள்ளார். இந்நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு நேரடியாக ஐயப்பன் விக்கிரகத்தில் அபிஷேகம் செய்யப்படும்.
மகரஜோதி மற்றும் மகர சங்கரம பூஜைக்கு முன்னோடியாக சுத்தி கிரியைகள் ஜன.,12 துவங்கும். அன்று மாலை தீபாராதனைக்கு பின் பிரசாத சுத்தி கிரியைகளும், ஜன.13 மதியம் உச்சபூஜைக்கு முன்னோடியாக பிம்பசுத்தி பூஜைகளும் நடக்கும்.
ஜன., 12 -ல் பந்தளத்தில் இருந்து புறப்படும் திருவாபரணபவனி ஜன., 14 மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி வந்தடையும். இங்கு தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின் ஸ்ரீ கோயிலுக்கு கொண்டு வரப்படும் திருவாபரணங்களை வாங்கி தந்திரி மற்றும் மேல் சாந்திகள் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவித்து மாலை 6:30 மணிக்கு தீபாராதனை நடத்துவர். இது முடிந்த சில வினாடி நேரங்களில் பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஜோதி காட்சி தரும்.
டிச., 30 -ல் துவங்கிய மகர விளக்கு சீசனில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகம் உள்ளது. தினமும் 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் நடத்துகின்றனர். இதனால் பக்தர்களின் நீண்ட வரிசை எப்போதும் மர கூட்டம் வரையுள்ளது. மகரஜோதி நாளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் அதற்கு முந்தைய நாட்களில் வரும் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்குவார்கள் என்பதால் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க அதிகாரிகள் பல்வேறு முன்னேற்பாடுகளை எடுத்து வருகின்றனர்.