மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு
மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு
ADDED : டிச 31, 2025 05:11 AM
சபரிமலை: மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. ஜன.,14ல் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
டிச., 27-ல் மண்டல பூஜை முடிந்து இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று மாலை 5:00 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஸ்ரீ கோயில் நடைதிறந்து விளக்கு ஏற்றினார்.
அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் நடத்தினர். இரவு 11.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இன்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்து நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடை பெறும். எல்லா நாட்களிலும் அதிகாலை 3:30 முதல் 11:00 மணி வரை நெய்யபிஷேகம் நடை பெறும்.
ஜன.,14-ல் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக 11-ல் அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் எருமேலியில் நடைபெறுகிறது. 12-ல் பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படும்.
மகரஜோதி தரிசனத்துக்காக பக்தர்களின் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் 13 மற்றும் 14 தேதிகளில் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்களிலும் 30 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதிக்கப்படுவர். ஸ்பாட் புக்கிங் இரண்டாயிரமாக குறைக்கப்படும் என்று என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

