கணவனை பிரிந்தார் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்
கணவனை பிரிந்தார் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்
UPDATED : ஜூலை 14, 2025 08:33 AM
ADDED : ஜூலை 14, 2025 07:19 AM

ஹைதராபாத்: இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது கணவன் பாருபள்ளி காஷ்யப்பை விட்டு பிரிவதாக அறிவித்தார். இதன்மூலம் 7 ஆண்டு திருமண பந்தம் முடிவுக்கு வந்தது.
ஹைதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற்ற சாய்னா நேவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப் ஆகிய இருவரும் இந்திய அணியின் பேட்மின்டன் போட்டியில் சிறந்து விளங்கினர்.
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா நேவால், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாகவும் திகழ்ந்தார். அதேபோல, காஷ்யப்பும் காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்காக தங்கம் வென்றார். சர்வதேச போட்டிகளிலும் சிறந்து விளங்கினார். அதன்பிறகு, காஷ்யப் கொடுத்த பயிற்சியில் சாய்னா நேவால் சிறப்பாக விளையாடினார். இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவர் பாருபள்ளி காஷ்யப்பை விட்டு பிரிவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில்; வாழ்க்கை சில சமயங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. நீண்ட யோசனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, நானும், பாருபள்ளி காஷ்யாப்பும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். மன நிம்மதி மற்றும் வளர்ச்சிக்காக இந்த முடிவு எடுத்துள்ளோம். இந்த நேரத்தில் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பு கொடுத்ததற்கு நன்றி, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.