சொத்து கணக்கு காட்டலேனா சம்பளம் 'கட்' : யோகி அதிரடி
சொத்து கணக்கு காட்டலேனா சம்பளம் 'கட்' : யோகி அதிரடி
UPDATED : ஆக 22, 2024 10:50 PM
ADDED : ஆக 22, 2024 10:36 PM

லக்னோ: உ.பி.யில் அரசு அதிகாரிகள் வரும் 31-ம் தேதிக்குள் தங்களின் அசையும், அசையா சொத்து விவரங்களை சமர்பிக்காவிட்டால் இம்மாத சம்பளம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் 13 லட்சம் அரசு ஊழியர்கள் பீதியில் உள்ளனர்.
உ.பி.,யில் முதல்வராக பொறுப்பேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத், 2017-ம் ஆண்டு மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், அனைவரும், தங்கள், அசையும், அசையா சொத்து விபரங்களை, உடனடியாக சமர்ப்பிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, பெரும்பாலான அமைச்சர்கள், தங்கள் சொத்து விபரங்களை, சமர்பித்தனர்.
இந்நிலையில் கடந்த நிதியாண்டிற்கான தங்களின் அசையும் அசையா சொத்து கணக்கை அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் அரசு இணையதளத்தில் சமர்பிக்கவில்லை என கூறப்படுகிறது.இதையடுத்து பல முறை அவகாசம் தரப்பட்டு, 2023 டிச. 31 வரை கெடு விதிக்கப்பட்டது. இதில் 26 சதவீதத்தினர் மட்டுமே சொத்து விவரங்களை சமர்பித்தனர்.
எஞ்சியவர்களுக்கு கடந்த ஜூன் 30 வரை மற்றும் ஜூலை 31-ம் வரை அவகாசம் தரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று ( ஆக.,22) தலைமை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தங்களின் அசையும், அசையா சொத்து விவரங்களை இம்மாதம் இறுதி (ஆக.31) க்குள் சமர்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் இம்மாதம் முதல் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அரசு உத்தரவால் 13 லட்சம் அரசு ஊழியர்கள் பீதியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.