தேர்தல் பத்திரங்கள் ரகசியங்களை எஸ்.பி.ஐ.,... சமர்ப்பித்தது!
தேர்தல் பத்திரங்கள் ரகசியங்களை எஸ்.பி.ஐ.,... சமர்ப்பித்தது!
UPDATED : மார் 13, 2024 02:09 AM
ADDED : மார் 11, 2024 11:54 PM

புதுடில்லி : தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விபரங்களை, 12ம் தேதி மாலைக்குள் தாக்கல் செய்யும்படி, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது எஸ்.பி.ஐ.,.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக, 2017ல் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, நம் நாட்டை சேர்ந்த தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், பணம் செலுத்தி தேர்தல் பத்திரங்களை வாங்கி, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம்; இப்படி நன்கொடை அளிப்பவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும்.
இந்த திட்டத்தின்படி, தேர்தல் பத்திரங்கள், பொதுத்துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் விற்கப்பட்டன.
இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது' என, கடந்த மாதம், 15ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த பத்திரங்களை வெளியிடும், எஸ்.பி.ஐ., அது தொடர்பான தகவல்களை, மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் கமிஷனுக்கு அளிக்க வேண்டும். அந்த விபரங்களை, மார்ச், 13ம் தேதிக்குள் தன் இணையதளத்தில் தேர்தல் கமிஷன் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், விபரங்களை சமர்ப்பிக்க வரும் ஜூன், 30ம் தேதி வரை அவகாசம் கேட்டு, எஸ்.பி.ஐ., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதேநேரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதாக, எஸ்.பி.ஐ.,க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் தொடரப்பட்டன.
இந்த மனுக்கள், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் சஞ்சிவ் கண்ணா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்த்தவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய, அரசியலமைப்பு சட்ட அமர்வு இதை விசாரித்தது.
வங்கி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதிட்டதாவது:
தேர்தல் பத்திரங்கள் விற்பனை தொடர்பான தகவல்கள், வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் சீலிடப்பட்ட உறையில் வைக்கப்பட்டன. அவை, வங்கியின் தலைமை அலுவலகமான மும்பைக்கு அனுப்பப்பட்டு சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டு உள்ளன.
இந்த திட்டத்தின் கீழ், தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்கள் தொடர்பான தகவல்கள் தனியாகவும், அவற்றை நன்கொடையாக பெற்ற அரசியல் கட்சிகள் பணமாக்கியது தொடர்பான தகவல்கள் தனியாகவும் வைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு தகவல்களையும் ஒப்பிட்டு சரிபார்ப்பது, சற்று கடினமான பணி. இதற்கு போதிய அவகாசம் தேவை. உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த உடனேயே, தேர்தல் பத்திரங்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நாங்கள் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த பின், 26 நாட்களில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதுதொடர்பாக, மனுவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரங்களை ஒப்பிட்டு பார்க்கும்படி நாங்கள் கூறவில்லை. உங்களிடம் அனைத்து தகவல்களும், சீலிடப்பட்ட உறையில் உள்ளது என்பது தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த தகவல்களை, 12ம் தேதியான இன்று மாலைக்குள் தேர்தல் கமிஷனுக்கு வழங்க வேண்டும். தேர்தல் கமிஷன் அந்த தகவல்களை, 15ம் தேதி மாலைக்குள், தன் இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.
இந்த உத்தரவு செயல்படுத்தப்படாவிட்டால், வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும். அதனால், அவகாசம் கேட்கும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிதத்து எஸ்.பி.ஐ.,
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்று 12-ம் தேதி தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ., சமர்ப்பித்தது.
காங்கிரஸ் வரவேற்பு!
இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால் கூறியுள்ளதாவது:
தற்போதைய ஆட்சியின் நேர்மையற்ற முறைகளில் இருந்து, ஜனநாயகத்தை உச்ச நீதிமன்றம் மீண்டும் காப்பாற்றியுள்ளது.ஒரு நாளில் முடியக்கூடிய வேலைக்கு, பாரத ஸ்டேட் வங்கி அவகாசம் கேட்டுள்ளது கேலிக்குரியது. தங்களுடைய அனைத்து முறைகேடுகளும் தெரிய வந்துள்ளதால், மத்திய அரசு அச்சத்தில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இணையத்திலும் வெளியிட முடிவு
மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 15-ம் தேதிக்குள் மேற்கண்ட தகவல்கள் அனைத்தையும் இணையதளத்தில் வெளியிட தேர்தல் ஆணை்யம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

