மேற்கு வங்க அரசு- டாக்டர்கள் பேச்சு; நேரலை ஒளிபரப்புக்கு தடையில்லை; சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்!
மேற்கு வங்க அரசு- டாக்டர்கள் பேச்சு; நேரலை ஒளிபரப்புக்கு தடையில்லை; சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்!
ADDED : செப் 17, 2024 12:50 PM

புதுடில்லி: ''பயிற்சி டாக்டர்கள் அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தை, நேரலை ஒளிபரப்புக்கு தடை விதிக்க முடியாது,'' என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேற்க வங்க மாநிலத்தில் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயதான பயிற்சி பெண் டாக்டர், ஆக., 9ல், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்றுக்கொண்டார்.
இது தொடர்பாக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மேற்குவங்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் பல்வேறு வாதங்களை முன்வைத்தார். அவர் வக்கீல்களுக்கு சமூகவலைதளங்களில் மிரட்டல் விடுக்கப்படுகிறது; எனவே பேச்சுவார்த்தை நேரலை ஒளிபரப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு பின்வருமாறு:
* பயிற்சி டாக்டர்கள் அரசுடன் நடத்தும் பேச்சு வார்த்தையை நேரலை ஒளிபரப்பு செய்வதை தடை செய்ய முடியாது. பொது நலன் கொண்ட வழக்கு என்பதால் வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியம்.
* இந்த வழக்கில் சி.பி.ஐ.,க்கு அவகாசம் தேவைப்படுகிறது. வழக்கில் உண்மையை கொண்டு வருவதற்கு போதுமான நேரத்தை கொடுக்க வேண்டும்.
* சி.பி.ஐ., அறிக்கை மூலம் ஆதாரங்கள் அழிப்பா? குற்றங்களுக்கு உடந்தை யார்? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது.
* சி.பி.ஐ., விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட் ஆய்வு செய்தது. வெளியே சொன்னால் விசாரணை பாதிக்கும்.
* பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இன்னும் விக்கிபீடியாவில் உள்ளது. இந்திய சட்டம் இதை தடை செய்கிறது. விக்கிபீடியா எங்கள் முந்தைய உத்தரவுக்கு இணங்க வேண்டும்.அடையாளத்தை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

