ADDED : செப் 02, 2025 05:36 AM
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் கொண்டாட்டத்தில் போட்டி போட்டு மது குடித்த பள்ளி மாணவன் மயக்கமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் கட்டப் பனை அருகே ஓணம் பண்டிகையை ஒட்டி இளைஞர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் பெண்கள் என, 17 பேர் பங்கேற்ற இட்லி சாப்பிடும் போட்டியில், பெரிய அளவிலான இட்லி அவித்து வைக்கப்பட்டிருந்தது.
இதில், குன்னும்புரத்தை சேர்ந்த ஜிதின் ஜிஜி, 16 இட்லிகளை சாப்பிட்டு முதல் பரிசு வென்றார். இதே போல, திருவனந்தபுரத்தில் கட்டுமான பணி நடந்த வீட்டில் ஏழு பள்ளி மாணவர்கள் இணைந்து மது குடிக்கும் போட்டி நடத்தியுள்ளனர்.
போட்டி போட்டு தண்ணீர் கலக்காமல் மது குடித்துள்ளனர். இதில், ஒரு மாணவன் மயங்கி விழுந்தார். இதை கண்டு பயந்த ஐந்து மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
ஒருவர் மட்டும் அழுதபடி மியூசியம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மாணவனை மீட்டு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். பள்ளி மாணவர்களுக்கு மது கிடைத்தது எப்படி என்பது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.