ADDED : பிப் 21, 2024 03:00 AM

ஹைதராபாத் : தெலுங்கானாவில், மாநில பழங்குடியினர் நல பொறியியல் துறையில், கே.ஜகஜோதி என்பவர் செயல் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில், துறை ரீதியான கோரிக்கை தொடர்பாக இவரை ஒருவர் அணுகினார். அப்போது, 84,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் உதவி செய்வதாக, ஜகஜோதி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு அந்த நபர் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, ஜகஜோதிக்கு அந்த நபர் அளித்தார்.
அப்போது, அதை மறைந்திருந்து வீடியோ எடுத்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார், ஜகஜோதியை கையும் களவுமாக பிடித்தனர்.
தான் மாட்டிக் கொண்டதை அறிந்த அவர், தேம்பித் தேம்பி அழுதார். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ஜகஜோதியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

