ரகசிய ஆலையில் போதைப்பொருள் தயாரித்து விற்பனை: தொழிலதிபர், சிறை வார்டன் கைது
ரகசிய ஆலையில் போதைப்பொருள் தயாரித்து விற்பனை: தொழிலதிபர், சிறை வார்டன் கைது
ADDED : அக் 30, 2024 01:48 AM

புதுடில்லி : போதைப் பொருள் தயாரித்து, நாடெங்கும் விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த ஆலை, டில்லி அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, தொழிலதிபர், திஹார் சிறை வார்டன், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலுக்கும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
டில்லிக்கு அருகே, உத்தர பிரதேசத்தின் கவுதம புத்தா நகர் மாவட்டத்தின் காஸ்னா தொழிற்பேட்டை பகுதியில் போதைப் பொருள் தயாரிக்கும் ஆலை இயங்கி வருவதாக, போதைப் பொருள் கட்டுப்பாடு வாரியத்துக்கு தகவல் கிடைத்தது.
டில்லி போலீசின் சிறப்பு பிரிவினருடன் இணைந்து, போதைப் பொருள் கட்டுப்பாடு வாரியத்தின் அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர்.
' மெத் ஆம்பெட்டமைன் '
அப்போது, அங்குள்ள ஒரு தொழிற்சாலையில், 'லேப்' எனப்படும் ஆய்வகம் அமைத்து, 'மெத் ஆம்பெட்டமைன்' எனும் போதைப் பொருள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, அந்த ஆலையை நடத்தி வந்த தொழிலதிபர், டில்லி திஹார் சிறையின் ஜெயிலர் ஒருவர், வட அமெரிக்க நாடான மெக்சிகோவைச் சேர்ந்த ஒருவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
இந்த ஆலையில் போதைப் பொருள் தயாரிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. அப்போது, 95 கிலோ எடையுள்ள மெத் ஆம்பெட்டமைன் எனும் செயற்கை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தவிர, போதைப் பொருள் தயாரிப்பதற்காக வைத்திருந்த ரசாயனங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
பல்வேறு பொருட்களை கலந்து இது போன்ற போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதில் இருந்து வெளியேறும் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை.
இந்த ஆலையை நடத்தி வந்த தொழிலதிபர், ஏற்கனவே போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மெக்சிகோ நபர்
அப்போது, அங்கிருந்த சிறை வார்டன் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின் இருவரும் நண்பர்களாக பழகினர். சிறையில் இருந்து வெளியே வந்ததும், வார்டனுடன் இணைந்து போதைப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டார்.
இதற்காக, மும்பையில் இருந்து மருந்து தயாரிக்கும் பயிற்சி பெற்ற ஒருவரை தங்களுடன் இவர்கள் சேர்த்துக் கொண்டனர். மேலும் சிலரும் இதில் இணைந்தனர்.
சோதனையின்போது, தொழிலதிபர், வார்டன் ஆகியோர் அந்த தொழிற்சாலையில் இருந்தனர். இதை தவிர, மெக்சிகோவைச் சேர்ந்த ஒருவரும் இருந்தார். அவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த ஆலையில் தயாரிக்கப்படும் போதைப் பொருளின் தரத்தை, அந்த மெக்சிகோ நாட்டவர் பரிசோதித்து உறுதி செய்து வந்தது தெரியவந்தது. மெக்சிகோ, போதைப் பொருள் கடத்தலுக்கு புகழ்பெற்றது.
அந்த நாட்டில் பல போதைப் பொருள் கடத்தல் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றான, சி.ஜே.என்.ஜி., என்றழைக்கப்படும், 'கார்டெல் டி ஜாலிஸ்கோ நுாவா ஜெனரேஷியன்' என்ற அமைப்புடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதில் இருந்து இந்த போதைப் பொருள் தயாரிப்பில், மெக்சிகோ போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிருந்து போதைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறதா என்பது தொடர்பாகவும், அதில் நடக்கும் பணப் பரிமாற்றம் தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.