ADDED : மே 17, 2025 12:13 AM
திருவனந்தபுரம்: கேரளாவில் தன்னிடம் பணிபுரிந்த ஜூனியர் வழக்கறிஞரை கொடூரமாக தாக்கிய மூத்த வழக்கறிஞரை, 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள வாஞ்சியூரில், மூத்த வழக்கறிஞர் பெய்லின் தாஸ் என்பவரிடம், ஷியாமிளி என்ற பெண் உட்பட பலர் ஜூனியர்களாக பணியாற்றி வருகின்றனர். தன் ஜூனியர்களிடம் எப்போதும் கோபமாக பேசி எரிந்து விழும் பெய்லின் தாஸ், அவர்களை அவ்வப்போது தாக்கி வந்தார்.
இவரிடம் பணிபுரிந்த ஷியாமிளியை கடந்த 13ம் தேதி பெய்லின் கொடூரமாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து ஷியாமிளி குடும்பத்தினர் அளித்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அவரின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.