ADDED : ஜன 27, 2024 11:05 PM
பெங்களூரு: ஹோட்டல், ரெஸ்டாரென்ட்களில் உள்ள கழிப்பறைகளை, பொதுமக்களும் பயன்படுத்த அனுமதியளிப்பது குறித்து, பெங்களூரு மாநகராட்சி ஆலோசிக்கிறது.
இதுதொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்களில் உள்ள கழிப்பறைகளை, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்த வாய்ப்பிருந்தது.
இனி பொதுமக்கள் பயன்படுத்த அனுமதியளிக்க, மாநகராட்சி ஆலோசிக்கிறது. இதுதொடர்பாக, சுற்றறிக்கை வெளியிடும்படி, மாநகராட்சி சுகாதார அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தனியாக, 100 கழிப்பறைகளை கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இவை 'ஷீ' கழிப்பறைகள் என, அழைக்கப்படும். திட்டத்தை செயல்படுத்த டெண்டர் கோரியுள்ளோம்.
இதற்காக 2024 - 25ம் ஆண்டு பட்ஜெட்டில், 25.50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பொது கழிப்பறைகள் கட்டப்படும்.
பொதுமக்கள் மற்றும் பெண்களுக்காக, பொது கழிப்பறைகள் கட்டுவதை, நிர்வகிப்பதை மேற்பார்வையிட, மாநகராட்சி தலைமை கமிஷனர், சிறப்பு கமிஷனர், மண்டல கமிஷனர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அதிகமான மக்கள் வசிக்கும் இடங்களில், புதிதாக இ - கழிப்பறை கட்டவும், ஏற்கனவே கட்டப்பட்ட கழிப்பறைகளை நிர்வகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.