மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில் தையல்; பல்லாரி பிம்ஸ் மருத்துவமனையில் 'கூத்து'
மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில் தையல்; பல்லாரி பிம்ஸ் மருத்துவமனையில் 'கூத்து'
ADDED : பிப் 16, 2025 07:10 AM

பல்லாரி : பல்லாரி பிம்ஸ் மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்டதால், மொபைல் போன் டார்ச் லைட் வெளிச்சத்தில், நோயாளிக்கு டாக்டர்கள் சிகிச்சை மேற்கொண்டனர்.
பல்லாரி பிம்ஸ் மருத்துவமனையில் கடந்தாண்டு குழந்தை பிரசவித்த பெண்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவம், நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இம்மரணத்துக்கு, அவர்களுக்கு வழங்கப்பட்ட 'ஐ.வி.,' தான் காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து, ஐ.வி., உற்பத்தி சாலை மூடப்பட்டது.
இந்நிலையில், விபத்தில் காயமடைந்த ஒருவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது மின்சார தடை ஏற்பட்டது. எனினும் அங்கு வந்த டாக்டர், தன் மொபைல் போன் டார்ச் லைட் வெளிச்சத்தில், காயமடைந்தவருக்கு தையல் போட்டார்.
விபத்தில் காயமடைந்தவரின் உறவினர் கூறுகையில், 'காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்த சிறிது நேரத்தில் மின்சாரம் தடைபட்டது. இது பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மருத்துவரை தொடர்பு கொண்ட பின், அங்கு வந்த அவர், தன் மொபைல் போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிக்கு தையல் போட்டார்.
'இந்த வேளையில், செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை பெற்று வந்த சில நோயாளிகள் சிரமப்பட்டனர். அரசு மருத்துவமனை ஊழியர்கள், எப்படி பணியாற்றுகின்றனர் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இத்தகைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டாக்டர்களின் ஊதியத்துக்கு லட்சக்கணக்கில் செலவிடும் அரசு, அவர்களில் சிலர் சரியாக வேலை செய்வதில்லை' என்றார்.
பொதுமக்கள் கூறுகையில், 'நிர்வாகம், பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அஜாக்கிரதையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
இந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மையம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய, மாநில அரசு கூட்டு முயற்சியில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.