மேற்கு வங்க அரசின் நல்ல முடிவு; மஹா., அரசும் பின்பற்றணும் என்கிறார் சரத்பவார்
மேற்கு வங்க அரசின் நல்ல முடிவு; மஹா., அரசும் பின்பற்றணும் என்கிறார் சரத்பவார்
UPDATED : செப் 04, 2024 02:10 PM
ADDED : செப் 04, 2024 02:07 PM

மும்பை: 'கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை மஹாராஷ்டிரா அரசும் பின்பற்ற வேண்டும்' என தேசியவாத காங்., (பவார்) கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்தார்.
பாலியல் குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை விதிக்கும் வகையில், 'அபராஜிதா' மசோதா எனப்படும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான மசோதா மேற்கு வங்கத்தில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் சரத்பவார் கூறியதாவது: மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை மஹாராஷ்டிரா அரசும் பின்பற்ற வேண்டும். அத்தகைய மசோதாவை எனது கட்சி ஆதரிக்கிறது. விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், மஹாராஷ்டிராவில் இப்போது சட்டசபை கூட்டத்தொடர் இருக்காது. இந்த விஷயத்தை நாங்கள் எங்கள் தேர்தல் பிரசாரத்தில் முன்னிலைப்படுத்துவோம். அதை தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிடுவோம்.
குறைந்த அனுபவம்
சமீபத்தில் இடிந்து விழுந்த சிவாஜி மகாராஜின் சிலையை உருவாக்கிய சிற்பிக்கு குறைந்த அனுபவம் மட்டுமே இருந்துள்ளது. அவர் இதற்கு முன் இவ்வளவு பெரிய வேலையைச் செய்ததில்லை. அவருக்கு இவ்வளவு பெரிய வேலையை வழங்குவது ஏற்புடையதல்ல.
அந்த சம்பவத்திற்குப் பிறகு, சத்ரபதி சிவாஜி மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள் வருத்தம் அடைந்தனர். பலத்த காற்றுதான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறினார். இந்த காரணங்கள் நம்பத்தகுந்தவை அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.