காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கு; காதலி கிரீஷ்மா குற்றவாளி என தீர்ப்பு
காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கு; காதலி கிரீஷ்மா குற்றவாளி என தீர்ப்பு
UPDATED : ஜன 17, 2025 11:42 AM
ADDED : ஜன 17, 2025 08:56 AM

திருவனந்தபுரம்: கேரளாவில் விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மாவை குற்றவாளி என நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு கோர்ட் அறிவித்தது.
கடந்த 2022ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட எல்லையான கேரள மாநிலம் பாறசாலை மூரியங்கரையைச் சேர்ந்தவர் ஷாரோன்ராஜ், 23. திங்கள்சந்தை அருகே நெய்யூரில் தனியார் கல்லுாரியில், 'ரேடியாலஜி' இறுதியாண்டு படித்து வந்தார். கல்லுாரிக்கு பஸ்சில் வந்து சென்ற போது, களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறையைச் சேர்ந்த கிரீஷ்மா, 22, என்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதற்கு கிரீஷ்மாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், பிப்ரவரியில் ராணுவ வீரர் ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதனால் கிரீஷ்மா, தன் காதலன் ஷாரோனுடன் தொடர்பை குறைத்தார். ஆனால், ஷாரோன் தொடர்ந்து அவருடன் பேச முயற்சித்தார். இருவரும் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் ஷாரோனிடம் இருந்ததால், அவரை வீட்டுக்கு அழைத்த கிரீஷ்மா, கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தார்.
வாந்தி எடுத்த அந்த வாலிபர், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். பாறசாலை போலீசார் கிரீஷ்மாவை கைது செய்து, நெடுமங்காடு போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தற்கொலைக்கு முயன்றார். இந்த கொலை வழக்கில் கிரீஷ்மாவுடன் சேர்த்து அவரது தாய் சிந்து மற்றும் மாமா நிர்மலாகுமரன் நாயர் ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு நெய்யாற்றின் கரை கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு கோர்ட் இன்று (ஜன.,17) தீர்ப்பை வெளியிட்டது. குற்றம்சாட்டப்பட்ட கிரீஷ்மா மற்றும் அவரது தாய் மாமன் நிர்மல்குமார் நாயரை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டது. மேலும், கிரீஷ்மாவின் தாயார் சிந்துவுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று அவரை விடுதலை செய்தும் கோர்ட் உத்தரவிட்டது. இவர்களுக்கான தண்டனை விபரம் நாளை (ஜன.,18) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கிரீஷ்மாவின் தாயார் விடுதலை செய்யப்பட்டது, ஷாரோனின் குடும்பத்தினர் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தனர். மேலும், விருப்பப்பட்டால், அவரின் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.