ADDED : டிச 05, 2024 07:26 AM
பெங்களூரு: முதல்வர் பதவி விவகாரத்தில் சித்தராமையாவுடன் ஒப்பந்தம் செய்து இருப்பதாக, துணை முதல்வர் சிவகுமார் பகிரங்கப்படுத்தி உள்ளார்.
பொதுவாக, மாநிலங்களில் காங்., ஆட்சிக்கு வந்தால், மாநில தலைவராக இருப்பவரே முதல்வர் பதவிக்கு வருவது வழக்கம். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தலைமையின் கீழ் 135 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
உடனே டில்லி பறந்த சிவகுமார், முதல்வர் பதவி வேண்டும் என மேலிட தலைவர்களிடம் கேட்டார். ஆனால், மூத்த அரசியல்வாதியான சித்தராமையா, தன் செல்வாக்கை பயன்படுத்தி முதல்வர் ஆனார். சிவகுமார் துணை முதல்வர் ஆக்கப்பட்டார்.
அப்போது, 'ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி' என கட்சி மேலிடம் ஒப்பந்தம் போட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதுகுறித்து இருவருமே எந்த தகவலையும் பகிரங்கப்படுத்தவில்லை. அதிகாரப்பூர்வமாக கட்சி மேலிடமும் தகவல் வெளியிடவில்லை.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு சிவகுமார் அளித்த பேட்டியில், “சித்தராமையா எங்கள் தலைவர், எங்களது முதல்வர். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. முதல்வர் பதவி விவகாரம் தொடர்பாக எங்களுக்குள் ஒப்பந்தம் உள்ளது.
''நாங்கள் இருவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். அவர் கூறுவதை நான் கேட்கிறேன். நான் சொல்லும் விஷயங்களை அவரும் கருத்தில் எடுத்துக் கொள்கிறார். கட்சிக்காக உழைப்பது எனது பலம். பதவி வேண்டும் என மேலிடத்தை மிரட்டாமல் இருப்பது எனது பலவீனம்,” என்றார்.
சிவகுமாரின் இந்த கருத்தின் மூலம் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு முதல்வர் மாற்றம் நடக்குமா என்று அரசியல் அரங்கில் பேச்சு எழுந்துள்ளது.
இதுகுறித்து மாண்டியாவில் சித்தராமையா நேற்று கூறுகையில், “முதல்வர் பதவி விவகாரம் தொடர்பாக, சிவகுமாருடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்,” என்றார்.
இதற்கு சிவகுமார் பதில் அளிக்கையில், “முதல்வர் கூறியதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நான் எப்போதும் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறேன். அமைச்சரவை மாற்றம் இப்போதைக்கு இல்லை,” என்றார்.