தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கூடங்குளம் அணுமின் நிலைய தரவுகள் கசிந்ததால் அதிர்ச்சி! சைபர் ஊடுருவல் பற்றி மத்திய அரசு தீவிர விசாரணை

கூடங்குளம் அணுமின் நிலைய தரவுகள் கசிந்ததால் அதிர்ச்சி! சைபர் ஊடுருவல் பற்றி மத்திய அரசு தீவிர விசாரணை

கூடங்குளம் அணுமின் நிலைய தரவுகள் கசிந்ததால் அதிர்ச்சி! சைபர் ஊடுருவல் பற்றி மத்திய அரசு தீவிர விசாரணை

1


UPDATED : ஜூலை 15, 2026 09:06 PM

ADDED : ஜூலை 15, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2026 09:06 PM ADDED : ஜூலை 15, 2026 08:52 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய வரைபடங்கள், ஆவணங்கள், 'டார்க் வெப்' வலையமைப்பில் கசிந்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சைபர் தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

தமிழகத்தின் நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4வது அணு உலைகளுக்கான உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், 'ரிலையன்ஸ் குழும' சர்வரில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய வரைபடங்கள், ஆவணங்கள் திருடப்பட்டு, 'டார்க் வெப்' எனப்படும், மறைமுகமாக இயங்கும் வலையமைப்பில் கசியவிடப்பட்டுள்ளன.

'யோட்டா' என்ற தரவு மைய சேவை வழங்குநரின் சர்வரில் சேமிக்கப்பட்ட தரவுகளை, 'வேர்ல்ட் லீக்ஸ்' என்ற 'ரான்சம்வேர் ஹேக்கர்' குழு பகுதியளவு திருடி, இணையதளத்தில் கசியவிட்டிருப்பதாக, 'ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்' நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இது குறித்து மத்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக எந்தெந்த முக்கிய தகவல்கள் கசிந்தன என்பது குறித்த விபரங்களை நிறுவனம் வெளியிடவில்லை. ஹேக்கர்கள் வெளியிட்டதாக கூறப்படும் 8.58 லட்சம் கோப்புகளில், 19,000 கோப்புகள் மிகவும் முக்கியமானயாக கருதப்படுகிறது.

தரவுகள் கசிந்திருப்பது அணுமின் நிலையத்தின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுதலாக இருக்கும் என அணு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆவணங்கள் எதிரிகள் கைகளுக்கு சென்றால், அணுமின் நிலையத்தின் துணை அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் உள்ள பலவீனங்களை கண்டறிய முயற்சிப்பர் என அவர்கள் கூறுகின்றனர்.

தரவுகளை வைத்திருந்த, 'யோட்டா' நிறுவனம், கடந்த மே 29 அன்று சந்தேகத்திற்கிடமான சைபர் நடவடிக்கை கண்டறியப்பட்டதும், உடனடியாக அதை தடுத்துவிட்டதாக கூறியுள்ளது. இருப்பினும், வெளிப்புற ஹேக்கர் குழு தரவு கசிந்து இருப்பதாக பின்னர் கூறியதாகவும், அதன் நம்பகத்தன்மை குறித்து விசாரித்து வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக சைபர் பாதுகாப்பு பிரச்னை எழுந்திருப்பது இது இரண்டாவது முறை. ஏற்கனவே கடந்த 2019ல் வடகொரிய ஹேக்கர் குழுவுடன் தொடர்புடைய, 'மால்வேர்' நிர்வாக கணினி வலையமைப்பில் கண்டறியப்பட்டது. ஆனால், அந்த 'மால்வேர்' தாக்குதலால் அணு உலைகளின் செயல்பாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள இந்திய அணுமின் கழகம், 'ரிலையன்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு, சைபர் ஊடுருவல் குறித்து விரிவாக விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்னென்ன தரவுகள் கசிந்தன? * கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் 3 மற்றும் 4-வது அலகுகளின் காற்றோட்ட மற்றும் குளிர்விப்பு அமைப்புகளின் வரைபடங்கள் * கூடங்குளத்தின் முக்கிய 'கட்டுப்பாட்டு அறையின்' முழுமையான தரைத்தள வடிவமைப்பு * அணுமின் நிலையப் பாதுகாப்புத் தணிக்கை அறிக்கைகள், உபகரணங்களின் ஆய்வுக் குறிப்புகள் மற்றும் கூட்டங்களின் விபரங்கள் * கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஏதேனும் பயங்கரவாதத் தாக்குதல் நேர்ந்தால், அதற்கு ஈடாக 950 கோடி ரூபாய் காப்பீடு கோரக்கூடிய 'ரிலையன்ஸ்' மற்றும் இந்திய அணுசக்தி கழகத்தின் ரகசியக் காப்பீட்டு ஆவணங்கள் * அதே சமயம் அணு உலையின் மைய செயல்பாட்டு பகுதி தொடர்பான ஆவணங்கள் கசியவில்லை என தெரியவந்துள்ளது



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us