கூடங்குளம் அணுமின் நிலைய தரவுகள் கசிந்ததால் அதிர்ச்சி! சைபர் ஊடுருவல் பற்றி மத்திய அரசு தீவிர விசாரணை
கூடங்குளம் அணுமின் நிலைய தரவுகள் கசிந்ததால் அதிர்ச்சி! சைபர் ஊடுருவல் பற்றி மத்திய அரசு தீவிர விசாரணை
UPDATED : ஜூலை 15, 2026 09:06 PM
ADDED : ஜூலை 15, 2026 08:52 PM

புதுடில்லி:தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய வரைபடங்கள், ஆவணங்கள், 'டார்க் வெப்' வலையமைப்பில் கசிந்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சைபர் தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
தமிழகத்தின் நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4வது அணு உலைகளுக்கான உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், 'ரிலையன்ஸ் குழும' சர்வரில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய வரைபடங்கள், ஆவணங்கள் திருடப்பட்டு, 'டார்க் வெப்' எனப்படும், மறைமுகமாக இயங்கும் வலையமைப்பில் கசியவிடப்பட்டுள்ளன.
'யோட்டா' என்ற தரவு மைய சேவை வழங்குநரின் சர்வரில் சேமிக்கப்பட்ட தரவுகளை, 'வேர்ல்ட் லீக்ஸ்' என்ற 'ரான்சம்வேர் ஹேக்கர்' குழு பகுதியளவு திருடி, இணையதளத்தில் கசியவிட்டிருப்பதாக, 'ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்' நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இது குறித்து மத்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக எந்தெந்த முக்கிய தகவல்கள் கசிந்தன என்பது குறித்த விபரங்களை நிறுவனம் வெளியிடவில்லை. ஹேக்கர்கள் வெளியிட்டதாக கூறப்படும் 8.58 லட்சம் கோப்புகளில், 19,000 கோப்புகள் மிகவும் முக்கியமானயாக கருதப்படுகிறது.
தரவுகள் கசிந்திருப்பது அணுமின் நிலையத்தின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுதலாக இருக்கும் என அணு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆவணங்கள் எதிரிகள் கைகளுக்கு சென்றால், அணுமின் நிலையத்தின் துணை அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் உள்ள பலவீனங்களை கண்டறிய முயற்சிப்பர் என அவர்கள் கூறுகின்றனர்.
தரவுகளை வைத்திருந்த, 'யோட்டா' நிறுவனம், கடந்த மே 29 அன்று சந்தேகத்திற்கிடமான சைபர் நடவடிக்கை கண்டறியப்பட்டதும், உடனடியாக அதை தடுத்துவிட்டதாக கூறியுள்ளது. இருப்பினும், வெளிப்புற ஹேக்கர் குழு தரவு கசிந்து இருப்பதாக பின்னர் கூறியதாகவும், அதன் நம்பகத்தன்மை குறித்து விசாரித்து வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக சைபர் பாதுகாப்பு பிரச்னை எழுந்திருப்பது இது இரண்டாவது முறை. ஏற்கனவே கடந்த 2019ல் வடகொரிய ஹேக்கர் குழுவுடன் தொடர்புடைய, 'மால்வேர்' நிர்வாக கணினி வலையமைப்பில் கண்டறியப்பட்டது. ஆனால், அந்த 'மால்வேர்' தாக்குதலால் அணு உலைகளின் செயல்பாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள இந்திய அணுமின் கழகம், 'ரிலையன்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு, சைபர் ஊடுருவல் குறித்து விரிவாக விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
