ADDED : மே 08, 2025 11:03 PM
ஷஹ்தரா: கிழக்கு டில்லியில் நடந்த திருமண ஊர்வலத்தின்போது கொண்டாட்ட துப்பாக்கிச் சூட்டில் குதிரை காயமடைந்தது. மணமகன் நுாலிழையில் உயிர் தப்பினார்.
அசோக் நகரைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞருக்கு திங்கட்கிழமை, கிழக்கு டில்லியின் மானசரோவர் பூங்காவில் திருமணம் நடந்தது.
முன்னதாக அவர், பாரம்பரிய சடங்கு வழக்கப்படி குதிரையில் அமரவைத்து, ஆகாஷ் திருமண நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது, மாப்பிளை அழைப்பில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி வெடித்தது, குதிரைக்கு காயம் ஏற்பட்டது. பீதியடைந்த குதிரை ஓடத்துவங்கியது. அதிர்ஷ்டவசமாக ஆகாஷ், கீழே குதித்து உயிர்தப்பினார்.
இந்தச் சம்பவம் திங்கட்கிழமை மாலை 6:30 மணியளவில் நடந்தது. குதிரை ஓடியதால் மணமகன் நடந்தே பூங்காவிற்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் குதிரையின் உரிமையாளர் நீரஜ் புகார் அளித்தார். குதிரை மீட்கப்பட்டு, ஹரியானாவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஆயுதச் சட்டம் மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

