வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை: துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சஸ்பெண்ட்
வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை: துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சஸ்பெண்ட்
UPDATED : ஜன 09, 2026 12:27 AM
ADDED : ஜன 08, 2026 11:53 PM

புதுடில்லி: துப்பாக்கி சுடுதல் பயிற்சி மைனர் வீராங்கனையை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், தேசிய பயிற்சியாளர் அங்குஷ் பரத்வாஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, பயிற்சியாளர் பதவியில் இருந்து அவரை தேசிய துப்பாக்கிச் சுடுதல் சங்கம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
மிரட்டல்
பஞ்சாப் மாநிலம் மொஹாலியைச் சேர்ந்தவர் அங்குஷ் பரத்வாஜ். இவர், 2008ல் நடந்த காமன்வெல்த் இளைஞர்கள் போட்டியில், 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் நம் நாட்டிற்காக தங்கம் வென்றவர்.
கடந்த 2024ல் நடந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பின், துப்பாக்கிச் சுடுதலில் திறன் வாய்ந்த வீரர், வீராங்கனையரை உருவாக்க, தேசிய துப்பாக்கிச் சுடுதல் சங்கம் 37 பயிற்சியாளர்களை நியமித்தது.
அப்போது, முன்னாள் வீரரான அங்குஷ் பரத்வாஜும் ஒரு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இவரிடம், பரிதாபாதைச் சேர்ந்த 17 வயது வீராங்கனை கடந்த ஆண்டு முதல் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி பெற்று வந்தார்.
பரிதாபாதின் சூரஜ்குந்த் பகுதியில் கடந்த மாதம் தேசிய விளையாட்டு போட்டி நடந்தது. அதில், மைனர் வீராங்கனையும் பங்கேற்றார்.
அப்போது, தான் தங்கி இருக்கும் ஹோட்டல் அறைக்கு வீராங்கனையை வர வழைத்து, பயிற்சியாளர் அ ங்குஷ் பரத்வாஜ் பாலியல் வன் கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
மேலும், இதுகுறித்து வெளியே கூறக் கூடாது என அவர் மிரட்டியதாகவும், அந்த வீராங்கனை தன் தாயிடம் கடந்த 1ம் தேதி தெரிவித்துள்ளார்.
வழக்குப்பதிவு
இதை தொடர்ந்து, பரிதாபாதில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் அங்குஷ் பரத்வாஜுக்கு எதிராக புகார் அளிக்கப் பட்டது.
அதன் அடிப்படையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதையடுத்து, தார்மீக ரீதியாக, தேசிய துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளர் பதவியில் இருந்து அங்குஷ் பரத்வாஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

