24 மணி நேரமும் டீக்கடைகள், உணவகங்கள் இயங்கலாம்! இரவுப்பணி செல்ல பெண்களுக்கும் அனுமதி
24 மணி நேரமும் டீக்கடைகள், உணவகங்கள் இயங்கலாம்! இரவுப்பணி செல்ல பெண்களுக்கும் அனுமதி
ADDED : பிப் 21, 2025 10:24 PM

ராய்ப்பூர்: தேநீர் கடைகள், ஓட்டல்கள் இனி 24 மணி நேரமும் இயங்க சத்தீஸ்கர் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
சத்தீஸ்கரில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி இரவு 10 மணிக்கு மேல் எந்த கடைகளும் செயல்பட அனுமதியில்லை. அதே போல் பெண்கள் இரவு நேரங்களில் பணிபுரியவும் அனுமதி இல்லை.
இந்நிலையில், தேநீர் கடைகள், ஓட்டல்கள் இனி 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்படுவதாக முதல்வர் விஷ்ணு தியோசாய் அறிவித்துள்ளார்.
தற்போதுள்ள புதிய விதிகளின்படி அளிக்கப்பட்டுள்ள அனுமதியானது, வணிக வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்தை கொண்டது. மேலும் புதிய அறிவிப்பின்படி, கடை அல்லது நிறுவனத்தில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.
பிப்.13ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கடை மற்றும் நிறுவனங்கள் பதிவுக்கான பொறுப்பு நகராட்சி அமைப்புகளிடம் இருந்து தொழிலாளர் துறைக்கு மாற்றப்பட்டு உள்ளது. மாநில அரசின் அறிவிப்பின் மூலம், தொழில்முனைவோர் மற்றும் வர்த்தகர்களுக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

