சிவக்குமார் சிறை செல்லும் வாய்ப்பு: சித்தராமையாவுக்கு மோடி மீது பாசம்
சிவக்குமார் சிறை செல்லும் வாய்ப்பு: சித்தராமையாவுக்கு மோடி மீது பாசம்
UPDATED : ஆக 24, 2025 07:20 AM
ADDED : ஆக 24, 2025 05:47 AM

பெங்களூரு: காங்கிரஸ் ஆட்சி நடத்தும் மாநிலங்களில், ஆளும் கட்சி அரசியல்வாதிகள், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., என, மத்திய புலனாய்வு அமைப்புகள், வழக்குகளில் சிக்கி தவிக்கின்றனர். ஆனால், காங்கிரசின் கர்நாடக முதல்வர் சித்தராமையா இதற்கு விதிவிலக்கு. இவருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே ஒருவித பாசமோ, பந்தமோ ஏதோ ஒன்று உள்ளது. இதற்கு முக்கிய காரணம், சித்தராமையா ஒரிஜினல் காங்கிரஸ் காரர் கிடையாது. காங்கிரசுக்கு எதிரான, ஜனதா கட்சி, ஜனதா தளம் என, பல கட்சிகளில் இருந்தவர்; அதன்பின் தான், காங்கிரசில் இணைந்தார்.
இவருக்கு அரசியல் ரீதியாக ஒரு பெரும் நன்மையைச் செய்துள்ளார் மோடி. 'இந்திய விமானப்படையின் சாகச ஏர் ஷோ, வழக்கமாக பெங்களூரில் நடைபெறும். ஆனால், இதை இந்த ஆண்டு மைசூரில் நடத்த வேண்டும்' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வேண்டுகோள் விடுத்தார் சித்தராமையா.
கர்நாடகாவின் தசரா விழா கொண்டாட்டம் மிகவும் பிரபலமானது. உலகின் பல நாடுகளிலிருந்தும் மக்கள் இந்த விழாவில் பங்கேற்பர். யானைகள் ஊர்வலமாக செல்லும். இந்த முறை ஏர் ஷோவும் இங்கு நடந்தால் நன்றாக இருக்கும் என்பது, முதல்வர் சித்தராமையாவின் விருப்பம்.
உடனே, இதற்கு பிரதமர் அனுமதி அளித்துவிட்டாராம். இதையடுத்து, ராஜ்நாத் சிங் கடிதம் வாயிலாக, சித்தராமையாவிற்கு பதில் அளித்தார். உடனே ராஜ்நாத் சிங்கிற்கு, 'நீங்கள் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும்' என, அழைப்பு விடுத்தார் முதல்வர்.
இன்னொரு பக்கம், வேறொரு விஷயத்திலும் மோடியை ஆதரித்துள்ளார் சித்தராமையா. மத்திய அரசு பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ள ஒரு சட்டம், பிரச்னையைக் கிளப்பியுள்ளது. 'ஊழல் வழக்கில் கைதாகி, சிறை சென்ற பிரதமர், முதல்வர் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் பதவி இழப்பர்' என்கிற இந்த சட்டம், இப்போது பார்லிமென்ட் குழுவிற்கு அனுப்பப்பட்டு உள்ளது.
ராகுல், ஸ்டாலின் உட்பட அனைத்து எதிர்க்கட்சியினரும், இந்த புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்; ஆனால், காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், வெளிப்படையாக அல்ல. காரணம், துணை முதல்வரும், சித்தராமையாவின் அரசியல் எதிரியுமான சிவகுமார் ஊழல் வழக்குகளில் சிக்கி உள்ளார். புதிய சட்டம் அமலுக்கு வந்தால், சிவகுமார் நிச்சயம் சிறை செல்வார்; அதனால் அவரது பதவி பறிபோகும் என்பதால் இதை ஆதரிக்கிறார் சித்தராமையா.