ராணுவ விமானத்தில் வந்திறங்கிய இந்தியர்கள்; தலைப்பாகை அகற்றியதற்கு சீக்கிய அமைப்பு கண்டனம்!
ராணுவ விமானத்தில் வந்திறங்கிய இந்தியர்கள்; தலைப்பாகை அகற்றியதற்கு சீக்கிய அமைப்பு கண்டனம்!
ADDED : பிப் 16, 2025 04:36 PM

அமிர்தசரஸ்: அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களில் இடம்பெற்றிருந்த சீக்கியர்களின் தலைப்பாகையை அகற்றிய சம்பவத்திற்கு ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், அந்நாட்டில் சட்ட விரோதமாக தங்கியிருந்த பிற நாட்டினர் வெளியேற்றப்படுகின்றனர். கடந்த மாதம் ஜனவரி 20ம் தேதி, 104 இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்களின் கைகள் விலங்குகளால் பூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக, பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அமெரிக்காவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே, இந்தியர்கள் அழைத்து வரப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் 2வது கட்டமாக நேற்றிரவு 11.35 மணியளவில் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு, 119 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 30 வயதுக்குட்டபவர்களாவர்.
அவர்களில் 67 பேர் பஞ்சாப், 33 பேர் ஹரியானா, எட்டு பேர் குஜராத், மூன்று பேர் உத்தர பிரதேசம், தலா இருவர் கோவா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தலா ஒருவர் ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களும் ஏஜென்டுகளை நம்பி பணம் கொடுத்து, கழுதை பாதை வழியாக அமெரிக்காவுக்கு சென்றதாக தெரிவித்துள்ளனர்.
இந்த முறையும் அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு கை மற்றும் கால்களில் விலங்கு போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதோடு, விமானத்தில் இருந்த சீக்கியர்களின் தலைப்பாகைகளை அமெரிக்க அதிகாரிகளின் அகற்றியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சீக்கியர்களின் மத உணர்வை புண்படுத்தியுள்ளதாகவும் கூறினார். சீக்கிய தலைப்பாகை அகற்றப்பட்டு, விமானத்தில் அழைத்து வரப்பட்ட சீக்கியர்களுக்கு, பத்காஷ் எனப்படும் சிறு தலைப்பாகையை சீக்கிய அமைப்பினர் வழங்கினர்.

