தானம் பெற்ற இதயத்துடன் 25 ஆண்டுகளாக வாழும் பெண்; அரிதான நிகழ்வு குறித்து சுவாரஸ்ய தகவல்
தானம் பெற்ற இதயத்துடன் 25 ஆண்டுகளாக வாழும் பெண்; அரிதான நிகழ்வு குறித்து சுவாரஸ்ய தகவல்
UPDATED : ஜன 25, 2026 11:24 AM
ADDED : ஜன 25, 2026 11:16 AM

புதுடில்லி: தானம் பெற்ற இதயத்துடன் 25 ஆண்டு வாழ்க்கையை நிறைவு பெற்ற ம.பி., மாநில பெண், இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு நீண்ட காலம் வாழ்பவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரீத்தி உன்ஹேல்,51. இவருக்கு கடந்த 2000ம் ஆண்டில் இதய பாதிப்பு காரணமாக கடுமையாக அவதிப்பட்டு வந்து இருக்கிறார். மும்பையில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று இருக்கிறார். ஆனாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. பின்னர் அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து இருக்கிறார்.
அப்போது தான் மிகப்பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது. அவருக்கு நீடித்த கார்டியோமயோபதி (dilated cardiomyopathy) எனப்படும் பலவீனமான இதயத் தசை பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதய தசை பலவீனமடைந்து பெரிதாகி, ரத்தத்தை திறம்பட பம்ப் செய்யும் திறன் குறைந்து செயலிழப்பு ஏற்பட்டது. 2000ம் ஆண்டில், பீர்த்தி உன்ஹேலுக்கு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டர் பி. வேணுகோபால் மூலம் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது முதல் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வருகிறார். மருத்துவர் பரிந்துரைத்தபடி, சரியான உணவு, மாத்திரைகளை உண்டு வருகிறார்.
தற்போது, 51 வயதான பீர்த்தி உன்ஹேல் தானம் பெற்ற இதயத்துடன் 25 ஆண்டுகள் வாழ்வை நிறைவு செய்துள்ளார். இதய மாற்று சிகிச்சை பெற்ற பிறகு நீண்ட காலம் வாழ்பவர் என்ற பெருமையை பெற்றார். இது இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு மைல்கல்லாகும்.
இது குறித்து பிரீத்தி உன்ஹேல் கூறுகையில்,''கற்பனை செய்ய முடியாத துயரத்தில் தானமாக பெறப்பட்ட ஒரு இதயத்தைப் பாதுகாக்கும் மாபெரும் பொறுப்பைச் சுமந்துகொண்டிருப்பதாக நான் எப்போதும் உணர்கிறேன். என் மூலம், இரண்டு உயிர்கள் வாழ்வதாகவே நான் கருதுகிறேன்,'' என்றார்.

