ADDED : செப் 21, 2024 12:54 AM

புவனேஸ்வர் : ஒடிசாவைச் சேர்ந்த பிரபல பாடகி ருக்சானா பானு, 27, உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவர் மீது பொறாமைப்பட்ட சக பாடகர் ஒருவர், குளிர்பானத்தில் விஷம் வைத்து கொன்றதாக புகார் எழுந்துள்ளது.
ஒடிசா மாநிலம், காலஹண்டி மாவட்டம், பவானி பட்னாவைச் சேர்ந்தவர் பிரபல பாடகி ருக்சானா பானு. இவர், சம்பல்பூரி மொழியில் பாடல்கள் பாடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலமானார்.
கடந்த மாதம் சம்பல்பூரி பாடல் ஆல்பம் ஒன்றின் படப்பிடிப்பிற்காக பலங்கிரி என்ற ஊருக்குச் சென்றார். அதன்பின், ஆக., 27ல் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சொந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமானதால் பலங்கிரியில் உள்ள இரண்டு மருத்துவக் கல்லுாரிகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போதும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து, புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ருக்சானாவுக்கு, 'ஸ்கிரப் டைபஸ்' எனும் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் நோய் அறிகுறி இருப்பதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை கூறியிருந்தது. இந்நிலையில், பாடகி ருக்சானா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
ருக்சானா, நோய்வாய்ப்பட்டு இறக்கவில்லை என்றும், அவர் மீது பொறாமை கொண்ட மற்றொரு சம்பல்பூரி பாடகர் விஷம் வைத்து கொன்றுவிட்டதாகவும் அவரது தாய் பரபரப்பு புகார் கூறியுள்ளார். அவர் யார் என்பதை கூறவில்லை.
ஆகஸ்ட் மாத இறுதியில் பாடல் படப்பிடிப்புக்காக சென்ற இடத்தில், ருக்சானாவுக்கு குளிர்பானம் தரப்பட்டதாகவும், அதை அருந்திய பின் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது என்றும் ருக்சானாவின் தாய் கூறியுள்ளார்.
இது குறித்து, போலீசிலும் அவர் புகார் அளித்துள்ளார்.