எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
UPDATED : பிப் 09, 2026 06:05 PM
ADDED : பிப் 09, 2026 05:30 PM

புதுடில்லி: '' எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது,'' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளை மேற்கொண்ட தேர்தல் கமிஷன், 58 லட்சம் போலி வாக்காளர்களை நீக்கி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.அதே சமயம், 1.36 கோடி வாக்காளர்களின் பெயர்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி விளக்கம் கேட்டுள்ளது. இதில், பெற்றோர் பெயரில் எழுத்துப் பிழை அல்லது பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலான வயது வித்தியாசம் போன்ற காரணங்கள் அடங்கும்.
எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் அம்மாநில அரசு மற்றும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தரப்பில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன.முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜாய்மால்யா பக்ஷி, விபுல் பஞ்சோலி அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குரூப் பி பிரிவு அதிகாரிகள் பெயரை மைக்ரோ அப்சர்வர்களாக பரிந்துரை செய்வதற்கு தாமதம் ஏற்படுத்தியது ஏன் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், 4 ம் தேதி நாங்கள் உத்தரவு போட்ட நிலையில், 7 ம் தேதி அதிகாலை 12 மணிக்கு இமெயிலில் பெயர் பட்டியலை அனுப்பியது ஏன் என்றார்.
மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி,'' குரூப் பி பிரிவு அதிகாரிகளை தேர்தல் கமிஷன் கேட்கவில்லை,'' என்றார்.
தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் தவான், வேண்டிய அலுவலர்கள் தொடர்பாக மேற்கு வங்க அரசுக்கு ஐந்து முறை கடிதம் எழுதினோம்,'' என விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி, '' தேவையான உத்தரவையோ அல்லது வழிமுறைகளை நாங்கள் பிறப்பிப்போம். ஆனால், எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதனை அனைத்து மாநிலங்களும் புரிந்து கொள்ள வேண்டும்,''எனத் தெரிவித்தார்.

