சூடுபிடிக்கும் சொத்து பிரச்னை ஜெகன் மீது சகோதரி குற்றச்சாட்டு
சூடுபிடிக்கும் சொத்து பிரச்னை ஜெகன் மீது சகோதரி குற்றச்சாட்டு
ADDED : அக் 26, 2024 12:59 AM

அமராவதி : “என் தந்தை ராஜசேகர ரெட்டி துவங்கிய தொழில்கள் அனைத்தும் குடும்பத்துக்கு சொந்தமானவை. அந்த சொத்துக்களுக்கு ஜெகன் உரிமையாளர் அல்ல,” என, அவரது சகோதரி ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா. ஜெகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனிக்கட்சி துவங்கிய ஷர்மிளா, தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்; ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார்.
தந்தையின் விருப்பம்
இந்நிலையில், தன் குடும்பத்துக்கு சொந்தமான, 'சரஸ்வதி பவர் அண்டு இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் பங்குகளை, ஷர்மிளா சட்டவிரோதமாக தன் பெயருக்கு மாற்றிக் கொண்டதாக, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் ஜெகன் புகார் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து, ஷர்மிளா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுஉள்ளதாவது:
என் தந்தை ராஜசேகர ரெட்டி உயிருடன் இருந்தபோது துவங்கிய தொழில்கள் அனைத்தும் ஒட்டுமொத்த குடும்பத்துக்கு சொந்தமானவை.
அந்த சொத்துக்கள் அனைத்தையும், தன் நான்கு பேரப் பிள்ளைகளுக்கு ஜெகன் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பதே என் தந்தையின் விருப்பம்.
இந்த சொத்துக்களுக்கு ஜெகன் பாதுகாவலர் மட்டுமே; உரிமையாளர் அல்ல.
நான்கு பேரப் பிள்ளைகளுக்கும் சமமான பங்கு என்ற அடிப்படையில், கடந்த 10 ஆண்டுகளில், குடும்ப நிறுவனங்களில் இருந்து என் பங்காக, 200 கோடி ரூபாய் பெற்றுள்ளேன். குடும்ப சொத்தில் எனக்கு வரவேண்டிய பங்கை தான் அவரிடம் கேட்டு வருகிறேன்.
'சரஸ்வதி பவர் அண்டு இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மட்டும் தான் அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது; பங்குகளை அல்ல.
உடன்படவில்லை
ஜெகன், அவரது மனைவி பாரதி, கடப்பா எம்.பி.,யும், உறவினருமான அவினாஷ் ரெட்டியை நான் அரசியல் ரீதியாக விமர்சிக்க கூடாது என, ஜெகன் கேட்டுக் கொண்டார்.
அதற்கு நான் உடன்படாததால், சொத்துப் பிரச்னையை வைத்து தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் புகார் அளித்து உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.