சீதா சோரன் பா.ஜ.,வில் இணைந்தார் ஜார்க்கண்ட் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி
சீதா சோரன் பா.ஜ.,வில் இணைந்தார் ஜார்க்கண்ட் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி
UPDATED : மார் 20, 2024 03:53 AM
ADDED : மார் 20, 2024 01:14 AM

ராஞ்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரனின் மருமகளும், எம்.எல்.ஏ.,வுமான சீதா சோரன், அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். இது கட்சிக்கு மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன், மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர். அவருடைய மகன் ஹேமந்த் சோரன், மாநில முதல்வராக இருந்தார்.
முதல்வர் பதவி
நில அபகரிப்பு மோசடி வழக்கில் சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், சிபு சோரனின் மற்றொரு மகனான, மறைந்த துர்கா சோரனின் மனைவி சீதா சோரன், கட்சியில் இருந்து, நேற்று விலகினார். தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அந்த பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து, பா.ஜ.,வில் அவர் இணைந்தார். புதுடில்லியில், பா.ஜ., தேசிய பொதுச் செயலர் வினோத் தாவ்டே, ஜார்க்கண்ட் தேர்தல் பொறுப்பாளர் லட்சுமி காந்த் பாஜ்பாய் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்.
மோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட நிலையில், முதல்வர் பதவியில் இருந்து அவர் விலகினார். அப்போது, தன் மனைவி கல்பனா சோரனை முதல்வராக்க திட்டமிட்டார். இதற்கு, சீதா சோரன் எதிர்ப்பு தெரிவித்தார்.
கடந்த, 2021ல், ராஜ்ய சபா தேர்தலின்போது, பணம் வாங்கி ஓட்டளித்ததாக சீதா சோரன் மீது வழக்கு உள்ளது.
போதிய ஆதரவு
பா.ஜ.,வில் இணைந்தது குறித்து சீதா சோரன் கூறியதாவது:
என் கணவர் இறந்தபின், கட்சியிலும், குடும்பத்திலும் எனக்கும், என் குழந்தைகளுக்கும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. தொடர்ந்து புறக்கணிக்கப் பட்டு வந்தோம்.
இதற்கு மேலும் பொறுமை காக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தான், கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

