சிவசங்கரப்பாவுக்கு பிற்படுத்தப்பட்ட பிரிவினர் சவால்
சிவசங்கரப்பாவுக்கு பிற்படுத்தப்பட்ட பிரிவினர் சவால்
ADDED : மார் 05, 2024 07:03 AM
பெங்களூரு: கர்நாடக பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட, ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை, சில நாட்களுக்கு முன்பு முதல்வர் சித்தராமையாவிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரசின் லிங்காயத், ஒக்கலிகர் தலைவர்கள், அமைச்சர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, மூத்த தலைவர் சிவசங்கரப்பா, 'குப்பை கூடையில் விழுந்திருந்த, பழைய ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை, அரசுக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த அறிக்கையை தாக்கல் செய்தால், வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவோம்' என எச்சரித்தார்.
இவருக்கு பதிலடி கொடுத்து, பிற்படுத்தப்பட பிரிவுகள் கூட்டமைப்பு தலைவர் ராமசந்திரப்பா நேற்று கூறியதாவது:
மாநிலத்தில் லிங்காயத், ஒக்கலிகர், பிராமணர் ஆகிய மூன்று சமுதாயங்களின் மக்கள் தொகை, 30 சதவீதம் உள்ளது. ஆனால், பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் மக்கள் தொகை, 70 சதவீதம் உள்ளது. அவர்கள் போராட்டம் நடத்தினால், நாங்களும் போராட்டம் நடத்துவோம். நாங்களா, அவர்களா என, பார்த்து விடுகிறோம்.
மாநில பிற்படுத்தப்பட்ட ஆணையம் நடத்திய, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும். பொதுமக்களுடன் விவாதிக்க வேண்டும்.
அறிக்கையில் தவறு இருந்தால், அதை சரி செய்த பின், அதில் உள்ள சிபாரிசுகளை செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்.ஆய்வறிக்கை குறித்து சிவசங்கரப்பா கூறியது கண்டிக்கத்தக்கது.
அறிக்கையில் தவறுகள் இருந்தால், அவற்றை சரி செய்து செயல்படுத்தும்படி, அரசுக்கு ஆலோசனை கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

