நாகாலாந்தில் ஆறு மாவட்டங்கள் ‛ஜீரோ' வாக்குப்பதிவு
நாகாலாந்தில் ஆறு மாவட்டங்கள் ‛ஜீரோ' வாக்குப்பதிவு
UPDATED : ஏப் 19, 2024 09:24 PM
ADDED : ஏப் 19, 2024 08:00 PM

கோஹிமா
: லோக்சபா தேர்தலில் இன்று நாகாலாந்தில் ஆறு மாவட்டங்களில் எந்த
வாக்குகளும் பதிவாகவில்லை. இப்பகுதி வாக்காளர்கள் கிழக்கு நாகாலாந்தை தனி
மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி, இன்று தேர்தலைபுறக்கணித்து
தங்கள் எதிர்ப்பை வெளிப் படுத்தினர்.
வடகிழக்கு மாநிலமான
நாகாலாந்தில், தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியைச் சேர்ந்த
முதல்வர் நெய்பியு ரியோ தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, கிழக்கு பிராந்திய மக்களுக்கு வளர்ச்சி திட்டங்கள்
முழுமையாக சென்று சேர்வதில்லை என்றும், மேற்கு பகுதியில் வசிக்கும்
மக்களுடன் ஒப்பிடுகையில், தாங்கள் பின்தங்கி இருப்பதாக பல
ஆண்டுகளாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில்,
கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு என்ற அமைப்பின் கீழ், ஆறு
மாவட்டங்களின் பழங்குடி அமைப்பினர் மற்றும் முன்னணி இயக்கங்கள்
ஒன்றிணைந்து தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து
இன்று நாகாலாந்தில் உள்ள ஒரு லோக்சபா தொகுதிக்கு ஓட்டுப்பதிவு
நடைபெற்றது. எனினும், ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 4 லட்சத்திற்கும் மேற்படட் மக்கள், இந்த
தேர்தலை புறக்கணித்தனர். இதன் காரணமாக, இந்த ஆறு மாவட்டங்களில்
உள்ள ஓட்டுச்சாவடிகளில் யாரும் ஓட்டளிக்கச் செல்லவில்லை. இதனையடுத்து அங்கு ‛ஜீரோ' வாக்குப்பதிவு ஆனது.

