ADDED : ஜன 01, 2025 10:15 PM

பாலக்காடு:கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம், அகத்தேத்தறை பகுதியைச் சேர்ந்த மணி- - ருக்மணி தம்பதி மகன் மனுராஜ், 16, மலம்புழா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். இவர், ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று, தேசிய அளவிலான போட்டிகளில் பரிசு பெற்றவர்.
குறைந்தபட்ச உயரத்துக்கு கீழே ஸ்கேட்டிங் செய்து பிரபலமானவர். மேலும், 60 கி.மீ., துாரம் ஸ்கேட்டிங் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், சபரிமலை யாத்திரையில் ஸ்கேட்டிங் செய்துள்ளார்.
இதுகுறித்து, மனுராஜ் கூறியதாவது:
சபரிமலைக்கு 260 கி.மீ., புனித யாத்திரையை டிச., 19ல் துவங்கினேன். டிச., 21ல் சன்னிதானம் சென்றேன். இந்தப் புனிதப் பயணத்தில், மேடு பள்ளங்களை கடந்து செல்வது சவாலாக இருந்தது.
என் தந்தை மணி ஸ்கூட்டரிலும், தாய் ருக்மணி ஜீப்பிலும் என்னுடன் பம்பை வரை வந்தனர். பயணத்தில் உடல்நலப் பிரச்னை எதுவும் ஏற்படவில்லை. விபத்தை தவிர்க்க வேகத்தை குறைத்து, தினமும், 100 கி.மீ., பயணம் செய்தேன்.
பம்பையில் இருந்து, படிக்கட்டுகள் இல்லாத டிராக்டர் செல்லும் பாதையில், ஸ்கேட்டிங் செய்து சன்னிதானம் சென்றேன். பதினெட்டு படிகளில் ஏறி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தேன். பின், ஜீப்பில் ஊர் திரும்பினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

