விக்ரம்-1 திட்டத்தில் வெற்றி பெற்ற ஸ்கைரூட்டின் அடுத்த மெகா திட்டம்: மனம் திறந்தார் சிஇஓ பவன் குமார்
விக்ரம்-1 திட்டத்தில் வெற்றி பெற்ற ஸ்கைரூட்டின் அடுத்த மெகா திட்டம்: மனம் திறந்தார் சிஇஓ பவன் குமார்
ADDED : ஜூலை 20, 2026 09:35 AM

புதுடில்லி: ''வரும் 2027ம் ஆண்டு முதல் மாதத்திற்கு ஒரு 'விக்ரம்-1' ராக்கெட்டை ஏவும் வகையிலான உற்பத்தித் திறனை எட்டுவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்'' என 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் இணை இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான (சிஇஓ) பவன்குமார் சந்தானா தெரிவித்தார்.
நாட்டின் முதல் தனியார் சுற்றுப்பாதை ராக்கெட்டான, 'விக்ரம் - 1' வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம், தனியார் நிறுவனம் உருவாக்கிய ராக்கெட்டுகளை விண்வெளி சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் பெற்ற, உலகின் மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
சுற்றுப்பாதையில் ராக்கெட்டை நிலைநிறுத்திய முதல் இந்தியத் தனியார் நிறுவனமாக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் மாறிய மறுநாளே, அடுத்த ஆண்டு முதல் மாதத்திற்கு ஒரு ராக்கெட்டைத் தயாரிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இது குறித்து 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் இணை இயக்குநர் பவன் குமார் சந்தனா கூறியதாவது: ராக்கெட் ஏவுதலுக்கான தேவை தற்போது அதிகமாக இருக்கிறது. அரசின் திட்டங்கள் நிறுவனத்திற்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடும். இந்தியாவின் செயற்கைக்கோள் கூட்டமைப்புத் திட்டங்கள் (satellite constellation plans) உள்நாட்டு ஏவுதலை கணிசமாக அதிகரிக்க வழி வகுக்கும்.
முதலில் நாங்கள் தரவுகளிலிருந்து கற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் மேம்பாடுகளைச் செய்து, மேலும் பல விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். வரும் 2027ம் ஆண்டு முதல் மாதத்திற்கு ஒரு 'விக்ரம்-1' ராக்கெட்டை ஏவும் வகையிலான உற்பத்தித் திறனை எட்டுவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்.
முதல் ஏவுதலைப் பொறுத்தவரை, ராக்கெட் புறப்பட்டு ஏவுதளத்தைக் கடந்து செல்வதே முதன்மையான நோக்கமாக இருந்தது. ஆனால் நாங்கள் சுற்றுப்பாதை வரை சென்று செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தினோம். எனவே, இது 100% வெற்றிகரமான பயணம் என்று நான் கருதுகிறேன். இதன் தாக்கம் பரவலாக உணரப்படுகிறது.
விக்ரம்-1ன் வெற்றி இந்திய நிறுவனங்களின் திறனை வெளிப்படுத்துகிறது. பல்வேறு சவால்களைக் கடந்து, சுற்றுப்பாதையை அடையும் திறனை ஒரு இந்திய நிறுவனத்தால் பெற முடியும் என்பதை இது காட்டுகிறது. இவ்வாறு பவன்குமார் சந்தானா கூறினார்.
