தலைப்புச்செய்திக்காக தந்திரம் செய்கிறார் ராகுல்; ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு
தலைப்புச்செய்திக்காக தந்திரம் செய்கிறார் ராகுல்; ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு
ADDED : ஆக 29, 2024 10:46 AM

புதுடில்லி: 'தலைப்புச்செய்தியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு தந்திரமாகப் பேசுகிறார் ராகுல்' என்று, முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டினார்.
ஆங்கில செய்தி சேனல் ஒன்றிக்கு ஸ்மிருதி இரானி அளித்த பேட்டி: தேர்தல் நேரத்தில் மக்கள் மனதில் இடம் பிடிக்க ராகுல் கோயில்களுக்கு அடிக்கடி சென்றார். இது கேலிக்கூத்தாக மாறியது. அந்த உத்தி பலனளிக்காததால், தற்போது ஜாதி பிரச்னை குறித்து பேச ஆரம்பித்துவிட்டார். லோக்சபா தேர்தலில் வெற்றியை ருசித்து விட்டதாக கருதிக்கொள்ளும் ராகுல், இப்போது வித்தியாசமான அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
மிஸ் இந்தியா
அவர் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார். ராகுலின் ஜாதி அரசியல் புதிய தந்திரம். மிஸ் இந்தியா போட்டிக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் சமூக ஊடகங்களில் இது போன்ற விஷயங்களைச் சொல்கிறார். ஏனெனில் அது தலைப்புச் செய்தியாகிறது. தெரிந்தே இது எல்லாம் அவர் திட்டமிட்டு செய்கிறார். இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்தார். இதன் மூலம் மீண்டும் அமைச்சராகும் அவரது வாய்ப்பு பறிபோனது; 2019ம் ஆண்டு தேர்தலில் ராகுலிடம் வெற்றி பெற்றவர் ஸ்மிருதி என்பது குறிப்பிடத்தக்கது.

