ADDED : ஜன 28, 2026 04:46 AM
ஸ்ரீநகர் :ஜம்மு - காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவால் நேற்று ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, 58 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணியர் கடும் அவதியடைந்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. ஸ்ரீநகரின் மோசமான வானிலை காரணமாக, விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய, 29 விமானங்கள், வரவேண்டிய 29 விமானங்கள் என மொத்தம், 58 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
இதனால் வார விடுமுறை, குடியரசு தின விடுமுறைக்காக காஷ்மீர் வந்த பயணியர் ஊர் திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர்.
இதுகுறித்து விமான நிலைய ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஸ்ரீநகரில் நிலவும் மோசமான வானிலை மற்றும் பனிப்பொழிவு காரணமாக, விமானங்களை பாதுகாப்பாக இயக்க முடியாது. இதனால், பயணியர் பாதுகாப்பு கருதி ஸ்ரீநகரில் இருந்து புறப்படும் மற்றும் வரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுகின்றன.
வானிலை சீரடைந்ததும் உடனடியாக விமானங்கள் இயக்கப்படும். எனவே, மாற்று ஏற்பாடுகள் உள்ளிட்ட நிலவரத்தை அறிய பயணியர் அனைவரும் விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்க அறிவுறுத்தப் படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

