ADDED : ஏப் 25, 2025 04:49 AM

ஜம்மு : ஜம்மு - காஷ்மீரில், மறைந்திருந்த பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த போது நடந்த துப்பாக்கி சண்டையில், ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள துது - பசந்த்கார் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக ராணுவத்தினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ராணுவத்தின் அதிரடிப்படை வீரர்கள், பயங்கரவாதிகள் மறைந்திருந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.
அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஹவில்தார் ஜான்டு அலி ஷேக் வீர மரணம் அடைந்தார். இதையடுத்து, கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த பகுதியை சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளை சல்லடை போட்டு தேடினர்.
இதில், பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வர் சிக்கினர். அவர்களை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று ராணுவத்தினர் விசாரிக்கின்றனர்.