ADDED : ஏப் 12, 2025 02:38 AM

பாகல்குன்டே: மது குடிக்க பணம் தர மறுத்ததால் இரும்பு கம்பி, கட்டையால் அடித்து தாயை கொன்ற மகன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு பாகல்குன்டே முனீஸ்வரா நகரில் வசித்தவர் சாந்தாபாய், 82. இவரது மகன் மகேந்திர சிங், 52. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, பிள்ளைகள் இருந்தனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகேந்திர சிங் வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்தார்.
இதனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணவரை, மனைவி பிரிந்தார். பின், தாயுடன் மகேந்திர சிங் வசித்தார். தாயிடம் இருந்து தினமும் பணம் வாங்கி மது குடித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தவர், மீண்டும் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.
ஆனால் பணம் கொடுக்க சாந்தாபாய் மறுத்து விட்டார். தாய், மகன் இடையில் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மகேந்திர சிங் இரும்பு கம்பி, கட்டையால் சாந்தாபாயை தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். மகேந்திரசிங்கை பாகல்குன்டே போலீசார் நேற்று கைது செய்தனர்.