மரபணு சோதனை நடத்த கோரிய மகன்: தனி உரிமையில் தலையிட கோர்ட் மறுப்பு
மரபணு சோதனை நடத்த கோரிய மகன்: தனி உரிமையில் தலையிட கோர்ட் மறுப்பு
ADDED : ஜன 29, 2025 02:09 AM

புதுடில்லி,'ஒருவர், தன் தந்தையை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, மற்றொருவரின் தனி உரிமை மற்றும் கண்ணியம் ஆகியவற்றை பறிக்க முடியாது' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த வழக்கு ஒன்றில், நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு மிக முக்கியமான தீர்ப்பை நேற்று வழங்கியது.
முறைகேடான உறவின் வாயிலாக பிறந்த நபர் ஒருவர், தன் தந்தை யார் என்று தெரிந்து கொள்வதற்காக மரபணு பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
என் தந்தை யார் என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன். அதற்காக, என் தாயார் குறிப்பிட்ட நபரிடம் மரபணு பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
ஏற்கனவே விசாரணை நீதிமன்றம் கடந்த 2007ல், குறிப்பிட்ட நபரிடம் மரபணு பரிசோதனை நடத்த உத்தரவிட்டிருந்த நிலையில், அதை 2008ல் கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மகன் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த மனு மீது நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:
தனது தந்தை யார் என்று ஒரு மகன் அறிந்து கொள்வது, அவரது உரிமைதான். அதே நேரத்தில் மற்றொரு நபரின் தனி உரிமை என்பதும், சம்பந்தப்பட்ட நபரின் அடிப்படை உரிமை. இதை இரண்டையும் சமமாக எடை போட வேண்டியுள்ளது.
மேலும், இவர் தன் தந்தை என்று சொல்லும் ஒரு நபரிடம் இருந்து மரபணு பரிசோதனையை நடத்த அனுமதிக்க முடியாது. ஏனென்றால், அது அவரது தனி உரிமை சார்ந்த விவகாரம். அதற்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.

