'என் வளர்ச்சி, சரிவுக்கு சோனியா குடும்பமே காரணம்': மணிசங்கர் அய்யர்
'என் வளர்ச்சி, சரிவுக்கு சோனியா குடும்பமே காரணம்': மணிசங்கர் அய்யர்
UPDATED : டிச 16, 2024 04:33 AM
ADDED : டிச 16, 2024 04:30 AM

புதுடில்லி: ''என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்றங்களுக்கும், சரிவுக்கும், சோனியா குடும்பமே காரணம்,'' என, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர், 83, கூறியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், தற்போது கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளதாவது:
என் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு சோனியா குடும்பமே காரணம்.
அதுபோல், என் சரிவுக்கும் அந்தக் குடும்பமே காரணம். சோனியாவை சந்திக்க, 10 ஆண்டுகளாக எனக்கு வாய்ப்பு தரப்படவில்லை.
அவரது மகனும், கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுலை, ஒரு முறை மட்டுமே சந்திக்க முடிந்தது; ஆனாலும், பெரிய அளவில் விவாதிக்க முடியவில்லை.
சோனியாவின் மகள் பிரியங்காவை சந்திக்க சில வாய்ப்புகள் கிடைத்தன. எப்போதாவது அவர் தொலைபேசியில் அழைத்து பேசுவார்.
ராகுலின் பிறந்த நாளுக்கு, பிரியங்கா வாயிலாகவே வாழ்த்து தெரிவிக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது.
கட்சியில் இருந்து ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன் என்பதற்கான காரணம் கேட்டு கடிதம் எழுதினேன். இதுவரை பதில் வரவில்லை.
கடந்த 2012ல் கட்சிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டது. அப்போது சோனியாவுக்கு உடல்நிலை சரியில்லை. பிரதமராக இருந்த மன்மோகன் சிங், ஆறு பைபாஸ் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார்.
அந்த நேரத்தில் கட்சி மற்றும் ஆட்சியை வழி நடத்தும் தகுதி, மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மட்டுமே இருந்தது. ஆனால், அவருக்கு அந்த வாய்ப்பை தர மறுத்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

