தந்தை ஜீவசமாதி அடைந்ததாக போஸ்டர் ஒட்டிய மகன்கள் : உடலை தோண்டி எடுக்க வந்த போலீசார் - கேரளாவில் சம்பவம்
தந்தை ஜீவசமாதி அடைந்ததாக போஸ்டர் ஒட்டிய மகன்கள் : உடலை தோண்டி எடுக்க வந்த போலீசார் - கேரளாவில் சம்பவம்
ADDED : ஜன 15, 2025 09:02 PM

திருவனந்தபுரம்: தனது தந்தை ஜீவசமாதி ஆகிவிட்டதாக கூறப்பட்டு வந்த விவகாரத்தில் போலீசாருக்கு சந்தேகம் ஏறபட்டதால், சமாதியை தோண்டி எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டும் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரள மாநிலம் அத்தியனூரில் உள்ள கவுவிளாகத்தில் கோபன்சுவாமி, 78 என்பவர், கடந்த சனிக்கிழமை அவராகவே ஜீவசமாதி ஆகிவிட்டதாகவும், நெய்யாற்றின்கரையில் தங்கள் தந்தைக்கு 'சமாதி' கட்டியுள்ளதாகவும் அவரது இரு மகன்களான சனந்தன், ராஜசேனன் ஆகிய இருவரும் போஸ்டர் ஒட்டி அறிவிப்பு செய்தனர்.
கோபன் சுவாமி மரணத்தில் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் எழுப்பியதால், தகவலறிந்த போலீசார் சமாதி அமைந்துள்ள இடத்தில் ஆய்வு செய்ய வந்தனர். அப்போது கோபன் சுவாமியின் மகன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுக்கவே, மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று சமாதி பீடத்தை தோண்டி எடுத்திட கலெக்டர் உத்தரவு நகலை காண்பித்தனர். இதற்கும் மகன்கள் சம்மதிக்கவில்லை. இது குறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கோர்ட் அனுமதி வழங்கியது.இதனை எதிர்த்து தடை கோரிய மகன்களின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
ஐகோர்ட் உத்தரவிட்டதன் பேரில் சமாதியை தோண்டி உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீஸ் படையுடன் வந்ததாகவும், அப்போது அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் சமாதி பீடத்தை நெருங்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்து தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதன் பேரில் சமாதி பீடத்தை தோண்டு முயற்சியை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
யார் அந்த கோபன் சுவாமி
கோபன் சுவாமி இயற்பெயர் மணியன் என கூறப்படுகிறது. இவர் நெசவுத் தொழிலாளியாக இருந்த பின் ஆன்மீகத்தில் ஆர்வம் காரணமாக தன் பெயரை கோபன் சுவாமி என மாற்றி கொண்டார். கவுவிளாகத்தில் கைலாச நாதன், மஹாதேவன் என்ற கோயில் கட்டி அங்கு வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் கோபன் சுவாமி காணாமல் போனதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஜீவசமாதி ஆகிவிட்டதாக மகன்களால் கூறப்படும் சமாதி பீடத்தில் இருப்பது கோபன் சுவாமி உடல் தானா வேறு நபரா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளதால் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.