ADDED : மே 25, 2026 04:48 AM

சென்னை: 'கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை, நாளை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன' என, இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை: பொதுவாக தென்மேற்கு பருவமழை, மே மாதம் இறுதியில், அந்தமான் நிகோபார் தீவுகளிலும், ஜூன் முதல் வாரத்தில், கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் தொடங்கும். வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காணப்படும் மாற்றங்கள் காரணமாக, இந்த ஆண்டு வழக்கத்தை விட, முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, மே, 16ல் அந்தமான் நிகோபார் தீவுகளில், தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து, கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், மே, 26ல் தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில், கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை நாளை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
கேரளாவில் வளிமண்டல சுழற்சி போன்ற காரணங்களால், தற்போது பல மாவட்டங்களில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திடீர் கனமழையால், பருவமழை தொடக்கத்தை, துல்லியமாக அறிவிப்பதில், சிறிது தாமதம் ஏற்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
