ADDED : மே 11, 2025 02:30 AM
புதுடில்லி: நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை ஐந்து நாட்கள் முன்னதாக, வரும் 27ம் தேதி துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நம் நாட்டின் பெரும்பாலான பகுதிக்கு, தென்மேற்கு பருவமழை வாயிலாகவே அதிக மழைப்பொழிவு கிடைக்கிறது. இந்த பருவமழையால், மக்கள் தொகையில் 42.3 சதவீதம் பேர் பயனடைகின்றனர். நம் நாட்டின் மொத்த வருவாயில் 18.2 சதவீதம், தென்மேற்கு பருவமழை வாயிலாக கிடைக்கிறது.
அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டவும், குடிநீர் மற்றும் மின் பயன்பாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யவும் தென்மேற்கு பருவமழை உதவுகிறது. வழக்கமாக, கேரளாவில் ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும்.
ஆனால், தற்போது ஐந்து நாள் முன்கூட்டியே, மே 27ம் தேதி இந்த பருவமழை துவங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும், பருவமழை துவங்கும் தேதி அல்லது மழைப்பொழிவு அளவு குறித்து தற்போது உறுதியாகக் கூற முடியாது என்றும், வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, வானிலை மையம் வெளியிட்ட முன்னறிவிப்பில், தென்மேற்கு பருவமழை காலத்தில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என வும், இக்காலக்கட்டத்தில், 105 சதவீத மழைப்பொழிவு இருக்கலாம் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.