அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர் தவிர்த்திருக்கலாம்: ராகுல் கருத்து
அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர் தவிர்த்திருக்கலாம்: ராகுல் கருத்து
ADDED : ஜூன் 27, 2024 03:46 PM

புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து பேசினார். அப்போது, நேற்று அவசர நிலை குறித்து பேசியதற்கு அதிருப்தி தெரிவித்த ராகுல், அதனை தவிர்த்திருக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
சபாநாயகராக பதவியேற்ற பிறகு ஓம் பிர்லா பேசுகையில், முன்னாள் பிரதமர் இந்திரா அவசர நிலையை அமல்படுத்தியது, அரசியல் சாசனம் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் எனக்கூறினார். இதற்கு லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுல் செயல்படுவார் என நேற்று ஓம்பிர்லா அறிவித்தார். இதனையடுத்து ராகுல் உள்ளிட்டோர் சபாநாயகரை சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் நிருபர்களிடம் கூறியதாவது: இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுலை சபாநாயகர் அறிவித்தார். இதனால், அவர், ‛ இண்டியா ' கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று சந்தித்தார்.
பார்லிமென்ட் செயல்பாடு குறித்து பல விஷயங்களை பேசினோம். அவையில் சபாநாயகர் அவசர நிலை குறித்து பேசியது குறித்தும் விவாதித்தோம். இதனை குறிப்பிட்ட ராகுல், அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர் தவிர்த்து இருக்க வேண்டும். இது அரசியல் ரீதியிலான கருத்து என்பதால் நிச்சயம் தவிர்த்து இருக்க வேண்டும் என்றார். இவ்வாறு வேணுகோபால கூறினார்.