நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசில் பிழைகளை திருத்த சபாநாயகர் உத்தரவு
நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசில் பிழைகளை திருத்த சபாநாயகர் உத்தரவு
UPDATED : பிப் 12, 2026 04:54 PM
ADDED : பிப் 12, 2026 06:42 AM

புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் அளித்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசில், பிழைகள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அது நிராகரிக்கப்படுவதை தவிர்க்க, பிழைகளை திருத்தும்படி லோக்சபா செயலகத்துக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவருக்கு எதிராக, காங்., - தி.மு.க., - சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான நோட்டீசை, லோக்சபா செயலர் உத்பால் குமார் சிங்கிடம் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நேற்று முன்தினம் அளித்தனர்.
இதில், 118 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டிருந்தனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள் யாரும் கையெழுத்திடவில்லை.
இந்த நோட்டீசில் பல்வேறு பிழைகள் இருந்தன. குறிப்பாக, 2026 என்பதற்கு பதில், நான்கு இடங்களில், 2025 என தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தகைய பிழைகள் இருந்தால், விதிமுறைகளின்படி, அந்த நோட்டீஸ் தானாகவே நிராகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இதையறிந்த லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, நோட்டீஸ் நிராகரிக்கப்படுவதை தவிர்க்க, பிழைகளை திருத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்படி, லோக்சபா செயலர் அலுவலகத்துக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
மார்ச் 9ல் துவங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வில், இந்த தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அது வரை சபைக்கு வருவதில்லை என்ற முடிவை சபாநாயகர் ஓம் பிர்லா எடுத்துள்ளார்.

