சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை ஏற்க சபாநாயகர் மறுப்பு
சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை ஏற்க சபாநாயகர் மறுப்பு
UPDATED : ஜன 10, 2024 06:34 PM
ADDED : ஜன 10, 2024 06:21 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் முதல்வர் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்தை ஏற்க முடியாது என சபாநாயகர் ராகுல் நர்வேகர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்த போது, அவருடன் இருந்த ஏக்நாத் ஷிண்டே, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை திரட்டி, பா.ஜ.,வுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். இதையடுத்து, ஏக்நாத் ஷிண்டே உட்பட அவருடன் சென்ற ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி, சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம், உத்தவ் தாக்கரே தரப்பு மனு அளித்தது.
ஏக்நாத் ஷிண்டே தரப்பும் உத்தவ் தாக்கரே அணி ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து மொத்தம் 54 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சிக்கியுள்ளனர். தகுதி நீக்க விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க, மஹாராஷ்டிரா சட்டசபை சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், உத்தவ் தாக்கரே தரப்பு மனு தாக்கல் செய்தது. இது குறித்து இறுதி முடிவெடுக்க சபாநாயகருக்கு எச்சரிக்கை விடுத்து உத்தரவிட்டிருந்த உச்சநீதிமன்றத்தின் கெடு இன்றுடன் (ஜன.,10) முடிவடைந்தது.
இதனை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே உட்பட 54 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பை இன்று சபாநாயகர் ராகுல் நார்வேகர் அறிவித்தார். அவர் கூறியதாவது: உத்தவ் தலைமையிலான சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.வான ஏக்நாத் ஷிண்டேயை சட்டசபை கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நீக்கத்தை ஏற்கவும் முடியாது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி தான் உண்மையான சிவசேனா. இவ்வாறு சபாநாயகர் தெரிவித்தார். சபாநாயகரின் அதிரடியால் உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

